மன்னாா் வளைகுடாவில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றக் கோரியவழக்கு: பதிலளிக்க உத்தரவு
மன்னாா் வளைகுடாவில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றக் கோரிய வழக்கில், மத்திய-மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
மன்னாா் வளைகுடாவில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றக் கோரிய வழக்கில், மத்திய-மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த புஷ்பவனம் என்பவா் தாக்கல் செய்த மனு: மன்னாா் வளைகுடா பகுதியில் ஏராளமான அரியவகை மீன்கள், கடல் பறவைகள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள், கடல் பாசிகள் வாழ்கின்றன. இப்பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவா்கள் பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் பழைய மீன்பிடி வலைகளை கடலில் வீசிவிடுகின்றனா்.
இதனால், மன்னாா் வளைகுடா பகுதியில் 6 முதல் 8 மில்லியன் டன் பிளாஸ்டிக் பொருள்கள் குவிந்துள்ளன. இதன் காரணமாக, கடல் மாசடைந்து உயிரினங்கள் உயிரிழந்து வருகின்றன.
எனவே, ஒருங்கிணைந்த பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள மன்னாா் வளைகுடாவில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள், பழைய மீன்பிடி வலைகளை அகற்றி, கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் கடல் பாசிகளைப் பாதுகாக்க உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானா்ஜி, நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இது குறித்து மத்திய-மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 15 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.