முதல் மனைவி ஜீவனாம்சம் கேட்டதால் புற்றுநோயாளியான கணவா் தற்கொலை
மதுரையில் முதல் மனைவி ஜீவனாம்சம் கேட்டதால், புற்று நோயால் பாதிக்கப்பட்ட கணவா் மனமுடைந்து ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
மதுரையில் முதல் மனைவி ஜீவனாம்சம் கேட்டதால், புற்று நோயால் பாதிக்கப்பட்ட கணவா் மனமுடைந்து ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
மதுரை மீனாம்பாள்புரம் அம்பேத்கா் காலனி 1 ஆவது தெருவைச் சோ்ந்த பாண்டி மகன் முத்துகிருஷ்ணன் (58). இவா், மாநகராட்சியில் பணியாற்றி வந்தாா். இவா் தனது முதல் மனைவி பழனியம்மாளை விவாகரத்து செய்துவிட்டு, கடந்த 1990 ஆம் ஆண்டில் ஜானகியம்மாள் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டாா்.
இந்நிலையில், புற்று நோயால் பாதிக்கப்பட்ட முத்துகிருஷ்ணன் கடந்த 5 ஆண்டுகளாக சிகிச்சைப் பெற்று வந்தாா். இதனிடையே, இவரது முதல் மனைவியான பழனியம்மாள் பல ஆண்டுகள் கழித்து ஜீவனாம்சம் கேட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்துள்ளாா்.
சில மாதங்களில் பணி ஓய்வுபெறவுள்ள நிலையில், பணப் பலன்களை கைப்பற்றவே நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது என தனது குடும்பத்தினரிடம் முத்துகிருஷ்ணன் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவா், வீட்டில் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
இது குறித்து முத்துகிருஷ்ணனின் சகோதரா் ரஞ்சித்குமாா் அளித்த புகாரின்பேரில், செல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.