முகப்பு
தினமணி கதிர்

தாய் மொழி நாள் விழிப்புணர்வு அவசியம்

'உலகத் தாய் மொழி நாள் என்பதை ஒரு நாளில் கடந்து செல்லமுடியாது. ஆண்டு முழுவதும் விழிப்புணர்வாக மாறும் வகையில் கொண்டாடப்பட வேண்டும்.

Updated On : 1 மார்ச் 2026, 4:13 pm IST
பகிர்:

'உலகத் தாய் மொழி நாள் என்பதை ஒரு நாளில் கடந்து செல்லமுடியாது. ஆண்டு முழுவதும் விழிப்புணர்வாக மாறும் வகையில் கொண்டாடப்பட வேண்டும். இந்த நாளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக நூல்களை வழங்குகிறேன். ஒரு மாணவர் நல்ல நூலை வாசித்து வாழ்க்கையில் முன்னேறினால் அதுவே எனக்குக் கிடைக்கும் மிகப் பெரிய விருது என்றே கருதுகிறேன்' என்கிறார் திருச்சி வாசகர் வட்டத் தலைவர் அல்லிராணி பாலாஜி.

திருவள்ளுவர், மகாகவி பாரதியார், காமராஜர், கம்பர் உள்ளிட்டோர் குறித்த நூல்களையும், தமிழ் இலக்கியம் சார்ந்த பல்வேறு நூல்களையும் வாங்கி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அவர் இலவசமாக அளித்தார். உலகத் தாய் மொழி நாளை முன்னிட்டு, திருச்சியில் அண்மையில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில்தான் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இதுகுறித்து அல்லிராணி பாலாஜியிடம் பேசியபோது:

Advertisement

Advertisement

'ஒரு சமூகத்தின் உயிரும், தலைமுறை அடையாளமும்தான் தாய் மொழி. அந்தத் தாய் மொழியைப் பாதுகாக்கவும், அதன் மீது குழந்தைகளுக்கு அன்பை விதைக்கவும் அரசுப் பள்ளி மாணவர்களை நான் எப்போதும் தேடிச் செல்வது வழக்கம்.

மாணவர்களின் முன்னேற்றம் கல்வியால் தீர்மானிக்கப்படுகிறது. அந்தக் கல்வியின் வேராக இருக்கும் மொழியைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடுவது, அந்தச் சமூகத்தின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்குச் சமமாகும். அந்தப் பொறுப்பை தன்னார்வமாக ஏற்கிறேன்.

மொழி மீது பெருமை கொள்ளச் செய்யவும், தாய் மொழி பேசுவதிலும் வெட்கப்பட வேண்டாம். இதற்கான எண்ணத்தை மாணவர்களின் மனதில் நிலை கொள்ளச் செய்கிறேன். அரசுப் பள்ளி மாணவர்கள் சமூக, பொருளாதாரச் சவால்களை எதிர்கொள்கின்றனர். அவர்களுக்கு வாய்ப்புகள் குறைவாக இருக்கலாம். ஆனால், திறமைகள் அதிகமாக இருக்கின்றன. அந்தத் திறமையை வெளிக்கொணர வேண்டும் என்ற ஊக்கத்தையும் நான் அளிக்கிறேன்.

தாய் மொழி வளர்ச்சி என்பது அரசு அல்லது தனிப்பட்ட அமைப்பின் பொறுப்பு மட்டுமல்ல. அது ஒவ்வொருவரின் கடமையும்கூட! மொழி வளர்ந்தால்தான் மக்கள் முன்னேற்றம் பெறுவார்கள். தாய் மொழி என்பது வெறும் தொடர்பு கருவி அல்ல. அது நம் உணர்வுகளின் வடிவம். ஒவ்வொரு மாணவரும் தன்னுடைய தாய் மொழியில் கற்றுக் கொள்ளும்போது, கருத்துகளை ஆழமாகப் புரிந்துகொள்ளவும், சிந்தனையை வளர்க்கவும், தன்னம்பிக்கையை அதிகரிக்கவும் உதவுகிறது.

என்னால் முடிந்த நூல்களை மாணவர்களுக்கு வழங்கியிருக்கிறேன். அந்த நூல்கள் மாணவர்கள் சிந்திக்கவும், கனவு காணவும், தங்கள் மொழியின் செழுமையை உணரவும் வழிவகுக்கும். அதில் தமிழ்க் கதைகள், வாழ்க்கை வரலாறுகள், கவிதைகள், இலக்கியம் உள்ளிட்ட அனைத்தும் அடங்கியுள்ளன.

இதை மாணவர்கள் பெற்றுக் கொண்டு அதனை திறக்கும் நொடியில், அவர்களின் கண்களில் தெரியும் மகிழ்ச்சி எதிர்காலத்தின் நம்பிக்கையாக மாறும். அதனை படித்து பயன்பெறும்போது, நாளை ஒரு விஞ்ஞானியாகலாம், எழுத்தாளராகலாம், ஆட்சியராகலாம். ஏதோ ஓரு வகையில் அவர்களுக்குப் படித்த நூல் கண்டிப்பாக உதவும்.

மொழி என்பது மரபு, வாசிப்பது என்பது வளர்ச்சி, பகிர்தல் என்பது மனித நேயம். இந்த மூன்றையும் ஒருங்கிணைத்து சமூக மாற்றத்தை உருவாக்க வேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் அளவுக்கு ஏற்றவாறு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நூல் வழங்கத் தொடங்கினால், தமிழ்ச் சமூகத்தின் வாசிப்பு, பண்பாடு வெற்றி பெறும்' என்கிறார் அல்லிராணி பாலாஜி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.