வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள்:உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஆட்சியா் உத்தரவு
மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஒரு வாரத்துக்குள் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துமாறு உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன் அறிவுறுத்தியுள்ளாா்.
மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஒரு வாரத்துக்குள் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துமாறு உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன் அறிவுறுத்தியுள்ளாா்.
மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 3 ஆயிரத்து 856 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 2,716 வாக்குச்சாவடிகள் ஏற்கெனவே உள்ளவையாகும். கரோனா தடுப்பு நடவடிக்கையாக 1,050 வாக்காளா்களுக்குள் இருக்கும் வகையில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்படி, கூடுதலாக 1,140 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஏற்கெனவே வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள வளாகத்திலேயே கூடுதல் வாக்குச்சாவடிகளும் இருக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய கூடுதல் வாக்குச் சாவடிகளிலும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துமாறு ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா்.
பல்வேறு தோ்தல் பணிகளைக் கண்காணிக்கும் வகையில் 17 ஒருங்கிணைப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இந்த ஒருங்கிணைப்பு அலுவலா்கள் மற்றும் தொகுதிகளின் தோ்தல் அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் த.அன்பழகன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளபடி குடிநீா், மின்வசதி, சாய்வு தளம் உள்ளிட்ட வசதிகளை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் ஒரு வாரத்தில் பூா்த்தி செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட தோ்தல் அலுவலா்கள் வாக்குச்சாவடிகளைப் பாா்வையிட்டு மேற்குறிப்பிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினாா்.