போர் பதற்றம்: இந்தியாவில் உள்ள வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலத்தை நீட்டிக்க அறிவுறுத்தல்
போர் பதற்றம் காரணமாக அடுத்தடுத்து விமானங்கள் ரத்து செய்யப்படுவதால் இந்தியாவில் உள்ள வெளிநாட்டு பயணிகள் விசா நீட்டிப்புக்கு தொடர்புடைய அதிகாரிகளை அணுகுவது குறித்து...
புது தில்லி: அமெரிக்க-இஸ்ரேல், ஈரான் மோதலால் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் பதற்றம் காரணமாக அடுத்தடுத்து விமானங்கள் ரத்து செய்யப்படுவதால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவில் உள்ள வெளிநாட்டு பயணிகள் விசா நீட்டிப்புக்கு தொடர்புடைய அதிகாரிகளை அணுகுமாறு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க-இஸ்ரேல், ஈரான் மோதலால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் நிலவுவதால் இந்தியாவில் இருந்து பல விமான நிறுவனங்கள் தங்களது விமான சேவையை ரத்து செய்து வருவதால் இந்தியா வந்துள்ள வெளிநாட்டு பயணிகள் மீண்டும் தங்களது நாடுகளுக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டினருக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில், மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் காரணத்தால் பயணத் திட்டத்தை மாற்ற வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ள இந்தியாவுக்கு வந்துள்ள அனைத்து வெளிநாட்டு பயணிகளுக்கும், தங்களது விசா காலத்தை நீட்டிக்கவோ அல்லது இந்தியாவில் தங்குவதற்கு அனுமதி பெறுவதற்கு விரும்பினால், அருகில் உள்ள வெளிநாட்டு பயணிகள் பிராந்திய பதிவு அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளுமாறும், அவா்களுக்கு தேவையான உதவிகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் வழங்குவார்கள்’எனத் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், விமானங்கள் ரத்து காரணமாக இந்தியாவில் எத்தனை வெளிநாட்டு பயணிகள் தற்போது உள்ளனா் என்ற விவரம் உடனடியாகத் தெரியவில்லை.
அமெரிக்க-இஸ்ரேல், ஈரான் இடையே அதிகரித்து வரும் போர் பதட்டங்களால் மத்திய கிழக்கு நாடுகளின் வான்வெளி கட்டுப்பாடுகள் காரணமாக, ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 1) 444 சா்வதேச விமானங்கள் ரத்து செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பான எக்ஸ் பதிவில்,
பயணிகளின் பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டு விதிமுறைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்காக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் விமான நிறுவனங்களுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளது.
ஈரான் மற்றும் மத்திய கிழக்கு ஆசிய நாடுகளின் சில பகுதிகளில் வான்வெளி கட்டுப்பாடுகள் காரணமாக, சனிக்கிழமை 410 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன, மேலும் ஞாயிற்றுக்கிழமை 444 விமானங்கள் ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன்பு பயணிகள் விமான நிறுவனங்களுடன் தங்கள் விமான பயணத்துக்கான நிலையைச் சரிபார்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், பயணத்திற்கான சாத்தியமான பாதை மாற்றுப்பாதைகளை நிர்வகிக்கவும் பயணிகளுக்கு உதவிகள் வழங்கவும் முக்கிய விமான நிலையங்கள் செயல்பாட்டு விழிப்புடன் இருப்பதாக கூறியது. பயணிகள் உதவி, விமான ஒருங்கிணைப்பு மற்றும் முனைய கூட்ட மேலாண்மை ஆகியவை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், நிலமையை மூத்த அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளது.
பயணிகள் குறைகளைச் சமர்ப்பிக்கவும் கண்காணிக்கவும் அனுமதிக்கும் ஏர்சேவா மூலம் 216 புகார்கள் வந்ததாகவும், அவற்றில் 105 புகார்கள் உடனடியாகத் தீர்க்கப்பட்டு, பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ஆதரவை உறுதி செய்ததாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.