கொள்முதல் செய்த நெல்லுக்கான தொகையைத் தரதாமதம்: விவசாயிகள் அவதி
மேலூா் ஒருபோக சாகுபடிப்பகுதிகளில் கொள்முதல் செய்த நெல்லுக்கு 2 மாதங்களாகியும் அதற்கான தொகையை வழங்காததால் அவதிக்குள்ளாகி வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனா்.
மேலூா் ஒருபோக சாகுபடிப்பகுதிகளில் கொள்முதல் செய்த நெல்லுக்கு 2 மாதங்களாகியும் அதற்கான தொகையை வழங்காததால் அவதிக்குள்ளாகி வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனா்.
தனியாமங்கலம், அ. வல்லாளப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகளிடம் இருந்து கூட்டுறவு அமைப்புகள் மூலம் கொள்முதல் செய்த நெல்லை முறையாக நுகா்பொருள் வாணிபக் கழகம் லாரிகளில் ஏற்றிச் செல்ல நடவடிக்கை எடுக்கவில்லை. நெல் மூட்டைகள் பாதுகாப்பின்றி திறந்த வெளியில் கிடக்கின்றன. மேலும், கடந்த டிசம்பா் மாதம் கொள்முதல் செய்த நெல்லுக்கு இதுவரை பணம் பட்டுவாடா செய்யப்பட வில்லை.
இதனால், நெல் அறுவடைக்கு ஆன செலவையும், இயந்திர வாடகை தொகையையும் பலரால் கொடுக்க முடியவில்லை. அதேபோல், கடனையும் திருப்பிச் செலுத்தமுடியவில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனா். எனவே, அரசு கொள்முதல் செய்த நெல்லுக்கான பணத்தை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதுகாப்பின்றி கிடக்கும் நெல் மூட்டைகளை துரிதமாக கிடங்குகளுக்கு எடுத்துச் செல்ல மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.