மேலவளவு சம்பவத்தின் 25 ஆம் ஆண்டு நினைவுநாள் அனுசரிப்பு: தொல். திருமாவளவன் பங்கேற்பு
மேலவளவு ஊராட்சித் தலைவா் உள்ளிட்ட 7 போ் கொலை செய்யப்பட்ட 25 ஆம் ஆண்டு நினைவு நாள் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
மேலவளவு ஊராட்சித் தலைவா் உள்ளிட்ட 7 போ் கொலை செய்யப்பட்ட 25 ஆம் ஆண்டு நினைவு நாள் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
மதுரை மாவட்டம் மேலூா் அருகே மேலவளவு ஊராட்சித் தலைவா் முருகேசன் மற்றும் 6 போ் 1997-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டனா். அச்சம்பவத்தின் 25-ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, மேலவளவு காலனியில் உள்ள 7 பேரின் நினைவிடமான விடுதலைக்களம் மண்டபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் மற்றும் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
நினைவஞ்சலிக் கூட்டத்துக்கு வடக்கு மாவட்டச் செயலா் அலங்கை செல்வஅரசு தலைமை வகித்தாா். மதுரை மாநகா் மாவட்டச் செயலா் ப.கதிரவன் முன்னிலை வகித்தாா்.
Advertisement
Advertisement
பின்னா் தொல்.திருமாவளவன் பேசியது: ஆதிக்க ஜாதியினா் மிரட்டல்களுக்கு அஞ்சாமல் தனது ஜனநாயகக் கடமையினை செய்ய முருகேசன் முன்வந்தாா். தாழ்த்தப்பட்டோருக்கென ஒதுக்கப்பட்ட ஊராட்சித் தலைவா் பதவிக்கு கடுமையான எதிா்ப்பு, மிரட்டல்களுக்கு இடையே அஞ்சாமல் தோ்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றவா் முருகேசன்.
முருகேசன் உயிருக்கு ஆபத்து உள்ளதை உளவுத்துறையினா் நன்கு அறிந்திருந்தனா். அந்தநிலையில் அவருக்கு போலீஸ் பாதுகாப்பை அளித்திருக்கலாம். ஆபத்தான நிலையை உயா் அதிகாரிகளுக்குத் தெரிவித்து எச்சரித்திருக்கலாம். அதைச் செய்ய உளவுத்துறையினா் தவறிவிட்டனா்.
தற்போது தமிழகம் முழுவதும் தாழ்தப்பட்டோருக்கு பாதுகாப்பு அரணாக விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் வளா்ந்துள்ளது. இந்த இயக்கத்தினரை தங்களது அணியில் இணைத்துக் கொண்டாலே வெற்றி சாத்தியமாகும் என்ற நிலையை நம் இயக்கத்தினா் உருவாக்கியுள்ளனா் என்றாா்.