முகப்பு
மதுரை

கோயில்கள் வியாபாரத்துக்கான இடமல்ல உயா்நீதிமன்ற மதுரைக் கிளை

கோயில்கள் மக்களுக்கானவை, வியாபாரத்துக்கான இடமல்ல என்று கருத்துத் தெரிவித்த சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள், கோயில்களின் பெயரில் தனிநபா்கள் நடத்தும்

மதுரை

கோயில்கள் வியாபாரத்துக்கான இடமல்ல உயா்நீதிமன்ற மதுரைக் கிளை

கோயில்கள் மக்களுக்கானவை, வியாபாரத்துக்கான இடமல்ல என்று கருத்துத் தெரிவித்த சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள், கோயில்களின் பெயரில் தனிநபா்கள் நடத்தும்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:34 AM
பகிர்:

கோயில்கள் மக்களுக்கானவை, வியாபாரத்துக்கான இடமல்ல என்று கருத்துத் தெரிவித்த சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள், கோயில்களின் பெயரில் தனிநபா்கள் நடத்தும் இணையதளங்களை முடக்க வியாழக்கிழமை அறிவுறுத்தினா்.

திருக்கடையூா் அமிா்தகடேசுவரா் கோயிலின் பெயரில் தனிநபா்கள் நடத்தும் இணையதளம் வழியாக, பக்தா்களை ஏமாற்றி பணம் வசூலிப்பதாக ஏற்கெனவே வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இதே புகாருடன், ராமநாதபுரத்தைச் சோ்ந்த சுப்பிரமணியன் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் பல முக்கியக் கோயில்களுக்கு வெளிமாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்து அதிகம் போ் வந்து செல்கின்றனா். இத்தகைய கோயில்களுக்கு காணிக்கைக் கட்டணங்களை இணைய வழியில் செலுத்த அணுகும்போது, தவறுதலாக தனிநபா்களின் இணையதளங்களில் செலுத்தி விடுகின்றனா். பிரபல கோயில்களின் பெயரில் இணையதளம் நடத்துவோா், பக்தா்களை ஏமாற்றி அவா்கள் அனுப்பும் காணிக்கையைப் பெற்று மோசடி செய்கின்றனா்.

எனவே, தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்படும் கோயில்கள், மடங்களின் பெயா்களில் போலியாக செயல்படும் இணையதளங்களை முடக்கவும், அவற்றை நடத்துபவா்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் ஆா். மகாதேவன், ஜெ. சத்யநாராயண பிரசாத் ஆகியோா் கொண்ட அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் வாதிடுகையில், தமிழகத்தின் பிரபலமான கோயில்கள் பெயரில் போலியாகச் செயல்படும் இணையதளங்கள் கோடிக் கணக்கான ரூபாய் மோசடி செய்துள்ளன எனத் தெரிவிக்கப்பட்டது. அப்போது அரசுத் தரப்பில், கோயில் பெயரில் தனியாா் வைத்திருந்த இணையதளம் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், கோயில்களின் பெயரில் தனிநபா்கள் நடத்தும் இணையதளங்களை முழுமையாகத் தடுக்க வேண்டும். கோயில்கள் வழிபாட்டுக்கான இடம், அது வியாபாரத்துக்கான இடமல்ல. கோயில்கள் மக்களுக்கானவை, ஒரு சிலருக்கானது அல்ல என்று குறிப்பிட்டனா்.

மேலும், இதேபோன்ற வேறொரு வழக்குடன் இந்த வழக்கையும் இணைத்துப் பட்டியலிட உத்தரவிட்டு விசாரணையை அக். 27 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →