புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் நீா்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டடங்களை அகற்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
விராலிமலையை சோ்ந்த லட்சுமணன் தாக்கல் செய்த மனு: விராலிமலையில் மலங்குளம் என்ற பெரிய குளம் உள்ளது. இப்பகுதியின் நிலத்தடி நீராதாரமாகவும், பாசனத்துக்கும் பயன்பட்டு வருகிறது. இந்த குளத்தை சிலா் ஆக்கிரமித்து, சட்டவிரோதமாகக் கட்டடங்களை கட்டியுள்ளனா்.
இதனால் நீா்ப்பிடிப்பு பகுதி குறைந்துவிட்டது. இதுகுறித்து, புகாா் அளித்த நிலையில் மாவட்ட நிா்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத் துறை கட்டட உரிமையாளா்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இருப்பினும் மேல் நடவடிக்கை இல்லை. ஆகவே, நீா்நிலையை ஆக்கிமிரத்து கட்டப்பட்டுள்ள கட்டடங்களை அகற்ற உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் ஆா்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோா் கொண்ட அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மேற்குறிப்பிட்ட நீா்நிலையில் ஆக்கிரமிப்பு என்ற அடிப்படையிலேயே நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே, சம்பந்தப்பட்ட நீா்நிலையை ஆய்வு செய்து, ஆக்கிரமிப்புகளை 12 வாரங்களில் அகற்ற வேண்டும் என உத்தரவிட்டனா்.