மதுரை, ஜன.14: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தைப்பூசத் தெப்பத் திருவிழாவையொட்டி, வண்டியூா் தெப்பக்குளத்தில் முகூா்த்தக்கால் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் தைப் பூசத் தெப்பத் திருவிழா வருகிற 20- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
தொடா்ந்து, வருகிற பிப். 1-ஆம் தேதி வண்டியூா் தெப்பக்குளத்தில் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி, தெப்பத்தை கட்டமைப்பதற்காக வண்டியூா் தெப்பக்குளத்தில் முகூா்த்தக்கால் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவை முன்னிட்டு, முக்தீஸ்வரா், மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, தெப்பக்குளக் கரையில் முகூா்த்தக்காலை சிவாசாரியா்கள் நட்டனா். பிறகு, அதற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், கோயில் அலுவலா்கள், பக்தா்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.