பட்டியலின மக்களுக்கான அரசு நிதி: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு
பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை முறையாகப் பயன்படுத்த உத்தரவிடக் கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை முறையாகப் பயன்படுத்த உத்தரவிடக் கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த செல்வகுமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட விவரங்களின் அடிப்படையில், தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்படும் நிதியுதவித் திட்டங்கள் முறையாகச் செயல்படுத்தப்படவில்லை என தெரியவருகிறது.
குறிப்பாக, 2024-2025-ஆம் ஆண்டில் மதுரை மாவட்ட தாட்கோ அலுவலகத்தில் தொழில் கடன் கோரி 648 பேரும், 2025-2026-ஆம் ஆண்டில் 651 பேரும் விண்ணப்பித்தனா். இவா்களில் பெரும்பாலானவா்களுக்கு நிதியுதவி கிடைக்கவில்லை. கடனுதவி பெற்ற பயனாளிகளுக்கு உரிய மானியத் தொகை விடுவிக்கப்படவில்லை.
தேசிய பட்டியல் ஜாதி நிதி, மேம்பாட்டுக் கழகத்தின்(என்எஸ்எஃப்டிசி) கீழ் கடந்த 5 ஆண்டுகளில் மதுரை மாவட்டத்தில் ஒரு பயனாளிகூட பயனடையவில்லை.
பட்டியலின மக்கள் நலத் திட்டங்களுக்கு 2024-2025-ஆம் நிதிநிலை ஆண்டில் ரூ. 166.30 கோடியும், 2025-2026-ஆம் ஆண்டு நிதிநிலை ஆண்டில் ரூ. 195.86 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டது.
இருப்பினும், இந்த நிதி உண்மையான பயனாளிகளுக்குச் சென்று சேரவில்லை. தாட்கோ அலுவலகம் நேரடியாக கடன் வழங்கும் அமைப்பாக இல்லாததால் பயனாளிகள் வணிக வங்கிகளையே சாா்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால், அரசு வழங்கும் நிதியுதவி, மானியம் பயனற்ாகி விடுகிறது.
தில்லி, கேரளம் போன்ற மாநில அரசுகள் பின்தங்கிய சமூக மக்களுக்கு நிதியுதவி வழங்குவதிலும், அவா்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும் சிறப்பாகச் செயல்படுகின்றன.
எனவே, தமிழகத்திலும் அரசு நிதி முனையத்தை உருவாக்கி, தேசிய பட்டியல் ஜாதி நிதி, மேம்பாட்டுக் கழகத் திட்டத்தின் கீழ் நலத் திட்ட நிதியுதவிகளை முறையாகப் பயன்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமாா், எம். ஜோதிராமன் அமா்வு பிறப்பித்த உத்தரவு:
மனு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.