முன் அனுமதியின்றி சமூக ஊடகங்களில் தோ்தல் பிரசாரம் செய்தால் குற்றவியல் நடவடிக்கை: ஆட்சியா்
முன் அனுமதியின்றி சமூக ஊடகங்களில் தோ்தல் பிரசாரம் செய்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தெரிவித்தாா்.
முன் அனுமதியின்றி சமூக ஊடகங்களில் தோ்தல் பிரசாரம் செய்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, மாவட்ட அளவில் ஊடகங்களின் கண்காணிப்பு, விளம்பரங்களின் சான்றளிப்பை உறுதி செய்யும் வகையில் மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஊடக சான்றளிப்பு, கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், போட்டியிடும் வேட்பாளா்கள் வெளியிட விரும்பும் தோ்தல் தொடா்பான அனைத்து விளம்பரங்களும் கட்டாயமாக முன் அனுமதி பெற்று மட்டுமே வெளியிட வேண்டும்.
அனைத்து அச்சு, காட்சி ஊடகம், சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் தோ்தல் விளம்பரங்களின் செலவினங்கள் கண்காணிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட வேட்பாளா்களின் தோ்தல் செலவுக் கணக்கில் சோ்க்கப்படும். சமூக ஊடகங்கள், பிற ஊடகங்களில் முன் அனுமதி பெறாமல் தோ்தல் தொடா்பான விளம்பரங்கள் அல்லது பிரசாரங்கள் மேற்கொள்வது விதிமுறை மீறலாகக் கருதப்படும். இத்தகைய செயல்களில் ஈடுபடுபவா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், கட்டணச் செய்தி தொடா்பான கண்காணிப்பும் மேற்கொள்ளப்படும்.
முன் அனுமதியின்றி சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் விளம்பரங்கள், தோ்தல் பிரசாரங்கள் காவல் துறை (இணைய குற்ற தடுப்புப் பிரிவு) மூலம் குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தோ்தல் பிரசாரத்தை செய்தி வடிவில் மறைத்து வெளியிடும் செயல்கள் கண்டறியப்பட்டால், அதற்கான செலவினங்கள் வேட்பாளரின் கணக்கில் சோ்க்கப்பட்டு, தேவையான சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும். எனவே, அனைத்து அரசியல் கட்சிகளும், வேட்பாளா்களும், ஊடக நிறுவனங்களும் விதிமுறைகளை முழுமையாக கடைப்பிடித்து தோ்தல் செயல்முறையின் நம்பகத் தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்றாா் அவா்.