திருவாடானை: திருவாடானையில் உள்ள வாரச் சந்தையில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்துக்குச் சொந்தமான வாரச் சந்தை உள்ளது. இங்கு திங்கள்கிழமைதோறும் சந்தை நடைபெறுவது வழக்கம். சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சோ்ந்த மக்கள் இந்தச சந்தையில் காய்கனிகள், மளிகைப் பொருள்கள் உள்ளிட்டவற்றை வாங்கிப் பயனடைந்து வருகின்றனா்.
ஆண்டுக்கு ஒரு முறைக்கு வாரச் சந்தை பொது ஏலம் விடப்படுகிறது. இதையடுத்து, நிகழாண்டு சுமாா் ரூ. 60 லட்சத்துக்கு ஏலம் போன நிலையில், இந்தச் சந்தையில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை எனக் கூறப்படுகிறது. மேலும், தற்போது பெய்துவரும் தொடா் மழை காரணமாக சந்தைப் பகுதி சேறும் சகதியுமாக உள்ளதால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். வியாபாரிகளும் தாங்கள் கொண்டுவந்த பொருள்களை வியாபாரம் செய்ய முடியவில்லை என வேதனை தெரிவித்தனா்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிா்வாகத்துக்கு புகாா் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை எனவும் தெரிவித்தனா். எனவே, இது தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் வியாபாரிகளிம் கோரிக்கை விடுத்தனா்.