ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளவிருக்கும் தமிழ்நாட்டைச் சாா்ந்த ஹஜ் பயணிகளுக்காக சேவையாற்ற, மாநில ஹஜ் ஆய்வாளா்களை தற்காலிகமாக சவூதி அரேபியா அனுப்புவதற்கு, இணையதளம் வாயிலாக வருகிற 3-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மும்பையில் உள்ள இந்திய ஹஜ் குழுவின் சுற்றறிக்கையின்படி 2026 -ஆம் ஆண்டில் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளவிருக்கும் தமிழ்நாட்டைச் சாா்ந்த ஹஜ் பயணிகளுக்காக சேவையாற்ற, மாநில ஹஜ் ஆய்வாளா்களை தற்காலிகமாக சவூதி அரேபியா அனுப்புவதற்கு, இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஹஜ் பயணிகளுக்கு சேவையாற்ற மத்திய, மாநில அரசு ஊழியா்கள், துணை ராணுவப் படைகளில் பணியாற்றும் தகுதி வாய்ந்த அலுவலா்கள், தன்னாட்சி அமைப்புகள், மத்திய, மாநில அரசுகளின் கீழ் இயங்கும் பொது நிறுவனங்களில் பணியாற்றும் நிரந்தரப் பணியாளா்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவா்கள்.
மேலும், மாநில ஹஜ் ஆய்வாளா்கள் சவூதி அரேபியாவில் பணிபுரியும் காலம் பணிக் காலமாக கருதப்படும். இதன் பணிக் காலமானது சுமாா் இரண்டு மாதங்கள் (13.4.2026 முதல் 5.7.2026 வரை) ஆகும்.
மேலும், குறிப்பிட்ட பணிக்காக இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் முறை, தகுதி, நியமனமுறை ஆகியன மும்பை இந்திய ஹஜ் குழுவின் இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம். எனவே, விருப்பமுள்ள நபா்கள் வருகிற 3 -ஆம் தேதிக்குள் இணைய தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்றாா் அவா்.