அரசுப் பேருந்தில் ஏற்றாததால் பள்ளிக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் அவதி
ஆண்டிபட்டி தாலுகா கண்டமனூர் வழியாக வரும் அரசுப் பேருந்து மாணவ, மாணவிகளை ஏற்றாமல் செல்வதால், அவர்கள் குறிப்பிட்ட
ஆண்டிபட்டி தாலுகா கண்டமனூர் வழியாக வரும் அரசுப் பேருந்து மாணவ, மாணவிகளை ஏற்றாமல் செல்வதால், அவர்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் பள்ளிகளுக்குச் செல்ல முடியவில்லை என புகார் எழுந்துள்ளது.
தேனி மாவட்டம் கண்டமனூர், தேக்கம்பட்டி, அடைக்கம்பட்டி, பொன்னம்மாள்பட்டி, மரிக்குண்டு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தேனியில் உள்ள பல்வேறு பள்ளிகளில் படித்து வருகின்றனர். கல்வி விகிதத்தை உயர்த்தவும், மாணவ, மாணவியர் இடைநில்லாமல் கல்வி கற்க வேண்டியும், அரசு ஏராளமான சலுகைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக, கிராமப்புற மாணவர்கள் நகர்ப்புறங்களில் உள்ள பள்ளிகளில் படிப்பதற்காக இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது.
வருசநாட்டிலிருந்து காலை 7 மணிக்கு திருப்பூருக்கு புறப்படும் அரசுப் பேருந்து, மேற்கண்ட கிராமங்கள் வழியாக வரும்போது, அதில் மாணவர்கள் ஏறிச் செல்வது வழக்கம். இதன்மூலம், மாணவர்கள் காலையில் சரியான நேரத்துக்குள் பள்ளியை அடைய முடிந்தது. ஆனால், சமீபமாக இந்த பேருந்தில் மாணவர்களை ஓட்டுநரும், நடத்துநரும் ஏற்றுவதில்லையாம். இது குறித்து கேட்ட மாணவர்களை தரக்குறைவாகப் பேசுகின்றனராம்.
இதனால், குறிப்பிட்ட நேரத்தில் பள்ளிக்குச் செல்ல முடியாமல் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் போக்குவரத்து அதிகாரிகளிடம் பேசி மாணவர்களை பேருந்தில் ஏற்றிச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என, இப்பகுதி மாணவர்களும், பெற்றோரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.