பள்ளி செல்லாக் குழந்தைகள் கணக்கெடுப்பு ஏப்.1ல் தொடக்கம்
தேனி மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் வரும் ஏப்.1-ம் தேதி முதல் பள்ளி செல்லாக் குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி தொடங்க உள்ளது.
தேனி மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் வரும் ஏப்.1-ம் தேதி முதல் பள்ளி செல்லாக் குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி தொடங்க உள்ளது.
இது குறித்து மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள் கூறியது: அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும், பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்திய 14 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளை கணக்கெடுத்து, அவர்கள் பள்ளிப் படிப்பை தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு, பள்ளி செல்லாக் குழந்தைகள் கணக்கெடுப்பு பணி வரும் ஏப்.1-ம் தேதி தொடங்கி, மே மாதம் வரை நடைபெற உள்ளது. இந்த ஆண்டு 18 வயது வரை உள்ள பள்ளி செல்லாத, பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்திய குழந்தைகளை கணக்கெடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
பள்ளிகளில் மாணவர் வருகை பதிவேட்டின் அடிப்படையிலும், கிராமங்களில் வீடு வீடாகச் சென்றும், தொழில் நிறுவனங்களுக்குச் சென்றும் பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்திய, பள்ளி செல்லாக் குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு நடைபெற உள்ளது.
இந்தக் கணக்கெடுப்பில் கண்டறிப்படும் பள்ளி செல்லாக் குழந்தைகளை பள்ளிகள், அரசு மாணவர் விடுதிகள் மற்றும் உண்டு உறைவிடப் பள்ளிகளில் சேர்த்து படிப்பை தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.