உத்தமபாளையம் புறவழிச்சாலையில் நிழற்குடைகள் இன்றி பயணிகள் அவதி
தேனி மாவட்டம் உத்தமபாளையம் பேரூராட்சி புறவழிச்சாலை பேருந்து நிறுத்தங்களில் ஆபத்தான நிலையிலுள்ள மின்
தேனி மாவட்டம் உத்தமபாளையம் பேரூராட்சி புறவழிச்சாலை பேருந்து நிறுத்தங்களில் ஆபத்தான நிலையிலுள்ள மின் கம்பங்களை அகற்றி விட்டு அப்பகுதியில் நிழற்குடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
உத்தமபாளையம் வழியாக திண்டுக்கல் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலை அமைந்திருப்பதால் தமிழகம்-கேரளத்தை இணைக்கும் முக்கிய வழித்தடமாக இருக்கிறது. இதன் வழியாக தேனி, கம்பம் மற்றும் போடி பகுதிகளுக்கு ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.
இந்த சாலையில் பேருந்துகள் நிற்கும் இடத்தில் மின் கம்பங்கள் விபத்தை ஏற்படுத்தும் வகையில் ஆபத்தான நிலையில் காட்சியளிக்கின்றன.தேனி, மதுரை, திண்டுக்கல், குமுளி, தேக்கடி என இரு மாநிலங்களுக்கும் செல்லும் பயணிகள் அதிகளவில் இந்த பேருந்து நிறுத்தங்களை பயன்படுத்தி வருகின்றனர். 24 மணி நேரமும் பயணிகள் வந்து செல்லும் இவ்வழித்தடங்களில் பெரியர்வர்கள் முதல் குழந்தைகள் உள்ளிட்டோர் பேருந்திற்காக காத்து நிற்கின்றனர்.
இதில் நிழற்குடை வசதியில்லாததால் வாகனங்கள் அதிகளவில் சென்று வரும் நிலையில் சாலையோரத்தில் நிற்கும் பயணிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். மழை மற்றும் வெயிலில் பேருந்திற்காக நிற்க வேண்டிய நிலையில், பெரியவர்கள் , கர்ப்பிணிகள் மிகவும் அவதிப்படுவதை தவிர்க்க உத்தமபாளையம் புற வழிச்சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக நிற்கும் மின் கம்பங்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றி அமைத்து பயணிகளுக்கு தேவையான நிழற்குடையை அமைக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் தெரிவித்தனர்.