முகப்பு
தேனி

மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை: தேனி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

ஆண்டிபட்டி அருகே மூணாண்டிபட்டியில் குடும்பப் பிரச்னையில் மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு

Updated On : 23 ஜனவரி 2019, 7:39 am IST
பகிர்:

ஆண்டிபட்டி அருகே மூணாண்டிபட்டியில் குடும்பப் பிரச்னையில் மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தேனி மகளிர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
மூணாண்டிபட்டியைச் சேர்ந்தவர் ராசு மகன் ஜெயக்குமார் (26). இவரது மனைவி அதே ஊரைச் சேர்ந்த தவசி மகள் பவித்ரா. ஜெயக்குமார், பவித்ரா ஆகியோருக்கு இடையே குடும்பப் பிரச்சனை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. 
 இப் பிரச்சனையில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி தனது வீட்டில் இருந்து தந்தை வீட்டுக்கு வந்த பவித்ரா, அங்கு விஷ மாத்திரைகள் தின்று தற்கொலைக்கு முயன்றார்.
ஆபத்தான நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பவித்ரா, அங்கு சிகிச்சை பலனின்றி அதே ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஆண்டிபட்டி போலீஸார் வழக்குப்பதிந்து, மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக ஜெயக்குமாரை கைது செய்தனர்.
 இந்த வழக்கு விசாரணை தேனி மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.திலகம், மனைவியை தற்கொலைக்கு தூண்டிய ஜெயக்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.