ஆண்டிபட்டி அருகே ரயில்பாதை பணிக்கு வெடி வைத்ததில் ஒருவர் பலி
ஆண்டிபட்டி அருகே கணவாய் மலைப்பகுதியில் நடைபெற்று வரும் அகலரயில்பாதை பணியில் பாறைக்கு வைத்த வெடி வெடித்ததில் படுகாயமடைந்த கோயில் காவலர் ஞாயிற்றுக்கிழமை பலியானார்.
ஆண்டிபட்டி அருகே கணவாய் மலைப்பகுதியில் நடைபெற்று வரும் அகலரயில்பாதை பணியில் பாறைக்கு வைத்த வெடி வெடித்ததில் படுகாயமடைந்த கோயில் காவலர் ஞாயிற்றுக்கிழமை பலியானார்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கணவாய் மலைப்பகுதியில் தர்ம சாஸ்தா கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் தற்காலிக காவலர்களாக திம்மநாயக்கனூர் கிராமத்தை சேர்ந்த பெருமாள் மகன் சிவராமன் (40) என்பவரும், அதே கிராமத்தை சேர்ந்த தங்கராஜ் மகன் ஆண்டி(37) என்பவரும் வேலை செய்து வருகின்றனர். இக்கோயிலின் அருகில் மதுரை போடி அகலரயில் பாதை பணிக்காக மலையை குடையும் பணி நடைபெற்றுவருகிறது.
இதில் சனிக்கிழமை மாலை மலையை குடைவதற்காக அங்கு பணிபுரியும் பணியாளர்கள் பாறைகளுக்கு வெடி வைத்ததாக கூறப்படுகிறது. அப்போது கோவில் காவலர்கள் இருவரும் அப்பகுதிக்கு சென்றுள்ளனர். எதிர்பாரதவிதமாக பாறையில் வெடித்து சிதறிய கற்கள் அவர்கள் இருவரும் மீதும் விழுந்தது. இதில் படுகாயமடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். தலையில் பலத்த காயமடைந்த ஆண்டி மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
Advertisement
அங்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் ஆண்டி பலியானார். இதுகுறித்து ஆண்டிபட்டி காவல்துறையினர் அகலரயில் பாதை ஓப்பந்ததாரர்கள் சேலம் மாவட்டம் திருச்செங்கோடு அருகே ஈகில் எர்த் மூவின் உரிமையாளர், சேலம் மாவட்டம் நல்லூர் பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் சுப்பன், அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி மகன் பொன்னரசன், தேனி, உத்தமபாளையத்தில் சேர்ந்த மன்னர் மகன் ஸ்ரீதர் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் இல்லாமல் பாறைக்கு வெடிவைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.