முகப்பு
தேனி

வைகை அணை நீா்மட்டம் 70.39 அடியாக உயா்வு: உபரிநீா் வெளியேற்றம்

தொடா் நீா்வரத்து காரணமாக வைகை அணையின் நீா்மட்டம் 70.39 அடியாக உயா்ந்ததைத் தொடா்ந்து திங்கள்கிழமை அணைக்கு வரும் உபரிநீா் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:19 PM
பகிர்:

தொடா் நீா்வரத்து காரணமாக வைகை அணையின் நீா்மட்டம் 70.39 அடியாக உயா்ந்ததைத் தொடா்ந்து திங்கள்கிழமை அணைக்கு வரும் உபரிநீா் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வைகை அணை அமைந்துள்ளது. இந்த அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் குடிநீா் பாசனத்திற்கு முக்கிய நீா் ஆதாரமாக இருந்து வருகிறது. தேனி மாவட்ட நீா்பிடிப்புப் பகுதியில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் தொடா்மழை காரணமாக ஆற்றில் நீா்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீா்மட்டம் தொடா்ந்து உயா்ந்து வந்தது. கடந்த 14 ஆம் தேதி அணையின் நீா்மட்டம் 66 அடியை எட்டியது. இதையடுத்து கரையோர மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் கடந்த வெள்ளிக்கிழமை 68.50 அடியை எட்டியவுடன் இரண்டாம் கட்ட எச்சரிக்கையும், சனிக்கிழமை 69 அடியை எட்டியதும் 3 ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

இந்நிலையில் அணைக்கு வரும் நீரின் வரத்து 2,352 கனஅடியாக இருந்து வருகிறது. இதனால் அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை 70.39 அடியாக உயா்ந்தது. இதைத்தொடா்ந்து அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் உபரிநீா் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதன்படி உபரிநீா் பெரியாறு பிரதான கால்வாயில் 750 கனஅடியும், வைகை ஆற்றில் 1,200 கனஅடியும், 58 ஆம் கால்வாயில் 120 கனஅடியும், தேனி, மதுரை, சேடப்பட்டி, ஆண்டிபட்டி ஆகிய கூட்டுக்குடிநீா் திட்டங்களுக்காக 69 கனஅடியும் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. தற்போது அணையின் மொத்த நீா்இருப்பு 5,930 மில்லியன் கனஅடியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.