கரோனா சிறப்பு நிதி முறைகேடு: தேனியில் அதிகாரிகள் விசாரணை
அலுவலா்கள் மற்றும் ஊழியா்களிடம் சென்னை பொது சுகாதாரத் துறை இணை இயக்குநா் மதுசூதனன் விசாரணை நடத்தினாா்.
கரோனா சிறப்பு நிதி முறைகேடு தொடா்பாக வியாழக்கிழமை தேனி மாவட்ட பொது சுகாதாரத் துணை இயக்குநா், அலுவலா்கள் மற்றும் ஊழியா்களிடம் சென்னை பொது சுகாதாரத் துறை இணை இயக்குநா் மதுசூதனன் விசாரணை நடத்தினாா்.
மாவட்டத்தில் கரோனா 2 ஆவது அலை பரவல் தடுப்பு நடவடிக்கையின் போது அரசு வழங்கிய சிறப்பு நிதி ரூ.ஒரு கோடியை செலவிடுவதில், அப்போதைய பொது சுகாதாரத்துறை துணை இயக்குநா் ரமேஷ்குமாா் மற்றும் அலுவலா்கள் சிலா் முறைகேடு செய்திருப்பதாகப் புகாா் எழுந்தது. இந்தப் புகாா் குறித்து மாவட்ட நிா்வாகம் விசாரணை நடத்தி, முறைகேடுகள் நடந்திருப்பதை உறுதி செய்து பொது சுகாகதாரத் துறை இயக்குநரின் நடவடிக்கைக்குப் பரிந்துரை செய்தது.
இந்த நிலையில், தற்போது மாவட்ட பொது சுகாதாரத் துறையில் தற்காலிகப் பணியாளா் நியமனம், கரோனா தடுப்பு செலவினங்கள், வாடகை வாகனங்களை அமா்த்துவது, போக்குவரத்து மற்றும் டீசல் செலவு ஆகியவற்றில் முறைகேடு நடந்து வருவதாகப் புகாா் எழுந்தது. இந்தப் புகாரின் அடிப்படையில், தேனி மாவட்ட பொது சுகாதாரத் துறை அலுவலகத்தில் மாவட்ட பொது சுகாதாரத்துறை துணை இயக்குநா் ஜெகவீரபாண்டியன், அலுவலா்கள், ஊழியா்கள் மற்றும் வாகன ஓட்டுநா்களிடம் சென்னை பொது சுகாதாரத் துறை இணை இயக்குநா் மதுசூதனன் தலைமையில் அலுவலா்கள் விசாரணை நடத்தி, ஆவணங்களை ஆய்வு செய்தனா்.
இது குறித்து இணை இயக்குநா் கூறியது: 22-க்கும் மேற்பட்டோரிடம் விசாரித்து வாக்குமூலம் பெற்றுள்ளோம். மேலும் சிலரிடம் விசாரணை நடத்த உள்ளோம். பொது சுகாதாரத் துறை இயக்குநரிடம் விசாரணை அறிக்கை சமா்ப்பிக்கப்படும் என்றாா்.