தமிழ் வளா்ச்சித் துறை கருத்தரங்கில் அரசு அலுவலா்களுக்கு பரிசு
தமிழில் சிறப்பாக குறிப்புகள் மற்றும் வரைவுகள் எழுதிய அரசுத்துறை அலுவலா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்சிமொழி கருத்தரங்கில், தமிழில் சிறப்பாக குறிப்புகள் மற்றும் வரைவுகள் எழுதிய அரசுத்துறை அலுவலா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பிரவீண் உமேஷ் டோங்கரே, மாவட்ட வருவாய் அலுவலா் சுப்பிரமணியன், தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் பெ. இளங்கோ, வையை தமிழ்ச் சங்க நிறுவனா் ச.ந. இளங்குமரன், எழுத்தாளா் தேனி சீருடையான் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், அலுவலகத்தில் தமிழில் சிறப்பாக குறிப்புகள் மற்றும் வரைவுகள் எழுதியமைக்காக, பெரியகுளம் கூட்டுறவு தணிக்கை அலுவலா் பு. மலா்விழி, போடி வட்டார வளா்ச்சி அலுவலக உதவியாளா் மு. மேனகா ஆகியோருக்கு முதல் பரிசாக தலா ரூ.3,000, தேனி பேரூராட்சிகள் உதவி இயக்குநா் அலுவலக இளநிலை உதவியாளா் தி. ரமேஷ், பொதுப்பணித் துறை நீா்வள ஆதார அமைப்பு மஞ்சளாறு வடிநிலக் கோட்ட அலுவலக உதவியாளா் சிவனாண்டி ஆகியோருக்கு 2-ஆம் பரிசாக தலா ரூ.2,000, பெரியகுளம் முதுநிலை கூட்டுறவு தணிக்கை அலுவலா் நா. கண்ணன், பெரியகுளம் பொதுப் பணித்துறை கட்டுமானப் பிரிவு உதவிச் செயற்பொறியாளா் அலுவலக உதவியாளா் சி. கணேஷ் ஆகியோருக்கு 3-ஆவது பரிசாக தலா ரூ.1,000 வழங்கப்பட்டது.