கம்பம்: முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழக பகுதிக்கு விநாடிக்கு, 1000 கன அடி தண்ணீர் வெளியேற்றத்தால் லோயர் கேம்ப்பில் உள்ள மின்சார நிலையத்தில், 90 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி திங்கள்கிழமை நடைபெற்றது.
முல்லைப் பெரியாறு அணையில் தென்மேற்கு பருவமழை காரணமாக அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அணையிலிருந்து தமிழக பகுதிக்கு நீர் வெளியேற்றம் கடந்த சில நாள்களாக அதிகரித்து வருகிறது.
ஜூன் 22-ல் விநாடிக்கு, 600 கன அடியாக தமிழகப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டது. ஜூன் 25-ல் விநாடிக்கு 700 கன அடியாகவும், ஜூன் 26-ல் 800 கன அடியாகவும், திங்கள்கிழமை விநாடிக்கு 1000 கன அடியாகவும் வெளியேற்றப்பட்டது.
இதையும் படிக்க: ஆதரவாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
இதன் காரணமாக தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்தில் , ஞாயிற்றுக்கிழமை 72 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், திங்கள்கிழமை நீர் திறப்பு அதிகரித்ததால், 90 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி நடைபெற்றது. (மொத்தம் உள்ள 4 மின்னாக்கிகளில், தற்போது 3 மின்னாக்கி மட்டும் இயக்கப்பட்டு தலா 30 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது).
அணை நிலவரம்
முல்லைப் பெரியாறு அணையில் திங்கள்கிழமை, 129.0 அடியும் (மொத்த உயரம் 142 அடி), அணையில் நீர் இருப்பு, 4,482 மில்லியன் கன அடியாகவும், அணைக்குள் நீர்வரத்து விநாடிக்கு, 340 கன அடியாகவும், தமிழக பகுதிக்கு நீர் வெளியேற்றம் விநாடிக்கு, 1000 கன அடியாகவும் இருந்தது. நீர் பிடிப்பு பகுதிகளான பெரியாறு அணையில் மழை பெய்யவில்லை, தேக்கடியில் 0.4 மில்லி மீட்டர் மழை பெய்தது.