முல்லைப்பெரியாறு அணையில் பலத்த மழை: நீர் வரத்து அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி
முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்ததால், அணைக்குள் நீர் வரத்து அதிகரித்து வருகிறது.
கம்பம்: முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்ததால், அணைக்குள் நீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் முல்லைப் பெரியாறு அணையில் மழை இல்லாததால், அணைக்குள் நீர்வரத்து இல்லை, ஆனாலும் தேனி மாவட்டத்தில் குடிநீர் மற்றும் கால்நடைகளுக்கான விநாடிக்கு 100 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இந்நிலையில் மேற்கு வங்ககடலில் அசானி புயல் காரணமாக பரவலான மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்து, இதன் எதிரொலியாக செவ்வாய்க்கிழமை முல்லைப் பெரியாறு அணையில், நீர்பிடிப்பு பகுதிகளான முல்லையாறு, தேக்கடி, பெரியாறு அணை ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
தேக்கடியில் 50.0 மில்லிமீட்டர், பெரியாறு அணையில் 34.0 மில்லிமீட்டர் மழையளவும் பதிவானது. அணைக்குள் நீர் வரத்து விநாடிக்கு 824 கன அடியாக இருந்தது. பெரியாறு அணைப்பகுதியில் பெய்த மழையால் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அணை நிலவரம்
அணையில் நீர் மட்டம் 129.80 அடியாக இருந்தது (மொத்த அளவு 142 அடி). நீர் இருப்பு 4,654 மில்லியன் கன அடி. நீர் வரத்து விநாடிக்கு, 847 கன அடியும், தமிழக பகுதிக்கு நீர் வெளியேற்றம் விநாடிக்கு 100 கனஅடியாக இருந்தது.