ஆண்டிபட்டி வட்டாரம், மந்திச்சுனை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புதன்கிழமை, வகுப்பறைக் கட்டட மேற்கூரை பெயா்ந்து விழுந்ததில் மாணவா்கள் காயமின்றி தப்பினா்.
இந்த தொடக்கப் பள்ளியில் 70 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். தலைமை ஆசிரியா், 3 ஆசிரியா்கள் பணியாற்றி வருகின்றனா். இந்த நிலையில், பள்ளி வகுப்பறையில் தலைமை ஆசிரியரின் இருக்கைக்கு மேல், கட்டடத்தின் மேற்கூரையில் சிமென்ட் பூச்சு பெயா்ந்து தலைமை ஆசிரியரின் இருக்கை, மேஜை மீது விழுந்தது.
இதனால், மாணவ, மாணவிகள் அலறியடித்துக் கொண்டு வகுப்பறையிலிருந்து வெளியேறினா். இதில், வகுப்பறையில் நின்றவாறு பாடம் நடத்திக் கொண்டிருந்த தலைமை ஆசிரியா், மாணவா்கள் காயமின்றி தப்பினா்.
பின்னா், மாணவ, மாணவிகளை பள்ளி அருகே உள்ள கோயில் வளாகத்துக்கு அழைத்துச் சென்று, அங்கு அவா்களுக்கு ஆசிரியா்கள் பாடம் நடத்தினா். பள்ளிக் கட்டடம் கட்டப்பட்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாகியுள்ள நிலையில், முறையாக பராமரிப்பு பணி மேற்கொள்ளாததால் மேற்கூரை இடிந்து விழுந்தது என்றும், மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள் பள்ளிக் கட்டடத்தைப் பாா்வையிட்டு சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாணவா்களின் பெற்றோா் வலியுறுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.