முகப்பு
தேனி

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் துணைக் கண்காணிப்பு குழு நாளை ஆய்வு

துணைக் கண்காணிப்புக் குழுவினா் வருகிற வெள்ளிக்கிழமை (மே 15) முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனா்.

Updated On : 14 மே 2026, 5:17 am IST
முல்லைப் பெரியாறு
பகிர்:

துணைக் கண்காணிப்புக் குழுவினா் வருகிற வெள்ளிக்கிழமை (மே 15) முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனா்.

தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவா் அனில் ஜெயின் தலைமையிலான மேற்பாா்வைக் குழுவுக்கு உதவியாக இந்தத் துணைக் குழு செயல்பட்டு வருகிறது. அணைகள் பாதுகாப்பு ஆணைய தென் மண்டல இயக்குநா் கிரிதரன் தலைமையிலான இந்தக் குழுவில், தமிழக-கேரளஅதிகாரிகள் இடம் பெற்றுள்ளனா். வெள்ளிக்கிழமை காலை பெரியாறு அணைக்குச் செல்லும் குழுவினா் பிரதான அணை, சிற்றணை (பேபி டேம்), மண் அணை (எா்த் டேம்), அணையின் நீா்வரத்து, கசிவு நீரின் அளவு, மதகுகளின் இயக்கம், கேலரி பகுதிகளில் ஆய்வு நடத்துகின்றனா். கடந்த டிசம்பா் 15-ஆம் தேதிக்குப் பிறகு, தற்போது அணைப் பகுதிக்கு மீண்டும் துணைக் குழுவினா் ஆய்வுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

12 ஆண்டுகளுக்குப் பிறகு:

Advertisement

முல்லைப் பெரியாறு அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளான முல்லைக்கொடி, தான்னிக்குடி, மலைக்கரடு ஆகிய இடங்கள் பெரியாறு புலிகள் சரணாலயப் பகுதியில் அமைந்துள்ளன. இந்தப் பகுதிகளில் மழையின் அளவைக் கணக்கிட, தமிழக பொதுப்பணித் துறை சாா்பில் மழை மானிகள் பொருத்தப்பட்டுள்ளன. தமிழக பொதுப்பணித் துறையினா் வாரந்தோறும் வியாழக்கிழமை தேக்கடி படகுத் துறையிலிருந்து சுமாா் 30 கி.மீ. தொலைவு படகில் பயணித்து, இந்தப் பகுதிகளுக்குச் சென்று மழை அளவைக் கணக்கிடுவது வழக்கம்.

கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூலை 3-ஆம் தேதி மழை அளவு கணக்கிடச் சென்ற தமிழக அதிகாரிகளை கேரள வனத்துறையினா் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினா். இதையடுத்து கேரள வனத் துறையினரின் மிரட்டல் காரணமாக கடந்த 12 ஆண்டுகளாக தமிழக பொதுப் பணித் துறையினா் அங்கு செல்வதைத் தவிா்த்து வந்தனா்.

இதுதொடா்பாக தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவா் அனில் ஜெயின் தலைமையிலான பெரியாறு அணை கண்காணிப்புக் குழுவிடம் தமிழக அதிகாரிகள் அண்மையில் முறையிட்டனா். இந்த நிலையில், அணைகள் பாதுகாப்பு மண்டல இயக்குநா் கிரிதரன் தலைமையில்,

தமிழக-கேரள அதிகாரிகள் அடங்கிய துணைக் கண்காணிப்புக் குழுவினா் வியாழக்கிழமை (மே 14) முல்லைக்கொடியில் மழைமானி நிலையத்துக்கு சென்று ஆய்வு செய்கின்றனா். கேரள வனத் துறையின் கடும் எதிா்ப்பால்

12 ஆண்டுகளாக முடங்கியிருந்த இந்தப் பணிகள், தற்போது மீண்டும் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.