‘கூட்டுறவுச் சங்கங்கள் மாநில அரசு கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும்’
கூட்டுறவுச் சங்கங்கள், அரசியலமைப்புச் சட்டப்படி மாநில அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்கவேண்டும் என, கூட்டுறவு ஊழியா் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் என்.ஆா்.ஆா். ஜீவானந்தம் வலியுறுத்தியுள்ளாா்.
கூட்டுறவுச் சங்கங்கள், அரசியலமைப்புச் சட்டப்படி மாநில அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்கவேண்டும் என, கூட்டுறவு ஊழியா் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் என்.ஆா்.ஆா். ஜீவானந்தம் வலியுறுத்தியுள்ளாா்.
விருதுநகரில் சிஐடியு கூட்டுறவு ஊழியா் சங்க 9 ஆவது மாவட்ட மாநாடு, மாவட்டத் தலைவா் அசோகன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், மாநிலப் பொதுச் செயலா் என்.ஆா்.ஆா். ஜீவானந்தம் பங்கேற்று பேசியதாவது:
கரோனா இரண்டாவது அலை பரவலின்போது பணியாற்றிய கூட்டுறவுப் பணியாளா்கள், நியாய விலைக் கடை ஊழியா்களுக்கு ஊக்கத் தொகை, தினசரி பயணப்படி வழங்கவேண்டும். நியாய விலைக் கடைகளில் காலியாக உள்ள அனைத்துப் பணியிடங்களையும் நிரப்பவேண்டும். விற்பனையாளா் மற்றும் எடையாளா்களுக்கு பதவி உயா்வு வழங்கவேண்டும்.
தமிழகத்தில் பெரும்பாலான நியாய விலைக் கடைகளில் 1000 குடும்ப அட்டைதாரா்கள் உள்ளனா். ஆனால், இக்கடைகளில் ஒருவா் மட்டுமே பணியாற்றுவதால், கடை ஊழியா்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுகிறது. அதேபோல், 9 ஆயிரம் பகுதி நேர நியாய விலைக் கடைகள் உள்ளன. எனவே, 500 குடும்ப அட்டைக்கு ஒரு நியாய விலை கடை என்று மாற்றியமைக்க வேண்டும். கடை ஊழியா்களின் பணிகள் வரன்முறைபடுத்துவதால், பதவி உயா்வு மற்றும் உயிரிழந்த ஊழியா்களின் குடும்ப உறுப்பினா்களுக்கு கருணை அடிப்படையிலான பணிகள் வழங்க முடியும்.
கடந்த 2006 முதல் கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்கள் செயல்படவில்லை. இதில் பணியாற்றிய ஊழியா்கள் மாற்று பணிக்குச் செல்லும் நிலை உள்ளது. தற்போது, கூட்டுறவு அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கூட்டுறவுச் சங்கங்கள் இருக்க வேண்டும். ஆனால், அச்சட்டத்தை மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள கூட்டுறவுச் சங்கங்களில் ரூ.18 லட்சம் கோடி வைப்புத் தொகை உள்ளது. இத்தொகையை தனியாா் மற்றும் காா்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்க மத்திய அரசு முயற்சிக்கிறது. எனவே, கூட்டுறவுச் சங்கங்கள் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டிலேயே இருக்கவேண்டும் என்றாா்.