முகப்பு
காரைக்கால்

வழிப்பறிகளைக் கட்டுப்படுத்த ரோந்து பணியை  தீவிரப்படுத்த வலியுறுத்தல்

வழிப்பறி போன்ற குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த போலீஸார் ரோந்துப் பணியை தீவிரப்படுத்தவேண்டும் என போலீஸ் - பொதுமக்கள் நல்லுறவுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:19 PM
பகிர்:

வழிப்பறி போன்ற குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த போலீஸார் ரோந்துப் பணியை தீவிரப்படுத்தவேண்டும் என போலீஸ் - பொதுமக்கள் நல்லுறவுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
திருப்பட்டினம் காவல்நிலையத்தில் போலீஸ்  - பொதுமக்கள் நல்லுறவுக் கூட்டம் தெற்கு மண்டல காவல் கண்காணிப்பாளர் வம்சீதரரெட்டி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. ஆய்வாளர் மரியகிறிஸ்டின் பால், உதவி ஆய்வாளர் பெருமாள் மற்றும் திருப்பட்டினத்தைச் சேர்ந்த வணிகர் சங்கத்தினர், நுகர்வோர் அமைப்புப் பிரதிநிதிகள், நற்பணி மன்றத்தினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
திருப்பட்டினத்தில் பல தெருக்களில் சாலை மிகவும் மோசமாக இருக்கிறது. இந்தச் சாலைகளில் மின்விளக்குள் பல எரிவதில்லை. இது பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. கோயில்கள் நிறைந்த பகுதியாக திருப்பட்டினம் விளங்குவதால், பக்தர்கள் வருகையை  பயன்படுத்தி வழிப்பறி சம்பவங்கள் நடக்கின்றன. 
இதனை கட்டுப்படுத்துவதற்கு காவல்துறையினர் ரோந்துப் பணி தீவிரப்படுத்தவேண்டும்.  கண்காணிப்பு கேமராக்களை  முக்கிய இடங்களில் பொருத்தவேண்டும்.
திருப்பட்டினம் மார்க்கெட் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கிழக்குப் புறவழிச்சாலை மிகவும் மோசமாக இருப்பதும், முற்றிலும் விளக்குகளே இல்லாத நிலையாலும் விபத்துகள் அதிகரிக்கின்றன. இந்தப் பகுதியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.
சென்னை, புதுச்சேரியிலிருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி செல்லும் பேருந்துகள் கிழக்குப் புறவழிச்சாலையில் செல்லாமல், திருப்பட்டினம் கடைத்தெரு வழியாகச் செல்ல ஏற்பாடு செய்யவேண்டும்.  திருப்பட்டினம் ரயில் நிலைய வட்டாரத்திலும் கண்காணிப்பு மேம்படவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை  போலீஸாரிடம் வலியுறுத்தினர்.
காவல்நிலையத்தினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்புத்தரவேண்டும். குறிப்பாக, அறிமுகம் இல்லாதவர்கள் நடமாட்டம் இருந்தால், நிலையத்தினருக்கு தெரிவிக்கவேண்டும். வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் செல்லும்போது உரிய கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்துவிட்டுச் செல்லவேண்டும். 
பெரும்பாலும் குடியிருப்புப் பகுதிகளில் பொதுமக்கள் இணைந்து கண்காணிப்பு கேமராவை பொது இடத்தில் பொருத்தவும் முன்வரவேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகளைக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதோடு, பிற கோரிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறையினருக்கு தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →