முகப்பு
காரைக்கால்

காரைக்கால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

பொது முடக்கத்தால் மீன்கள் நல்ல விலைக்கு விற்க முடியாத நிலை நீடிப்பதாகக் கூறி, காரைக்கால் விசைப்படகு மீனவர்கள் செவ்வாய்க்கிழமை கடலுக்குச் செல்லவில்லை.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:58 PM
பகிர்:

பொது முடக்கத்தால் மீன்கள் நல்ல விலைக்கு விற்க முடியாத நிலை நீடிப்பதாகக் கூறி, காரைக்கால் விசைப்படகு மீனவர்கள் செவ்வாய்க்கிழமை கடலுக்குச் செல்லவில்லை.

காரைக்கால் மாவட்டத்தில் 11 மீனவ கிராமங்களைச் சேர்ந்த விசைப்படகுகள் காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு, கடலுக்குச் சென்று திரும்புகிறது. இத்துறைமுகத்தில் சுமார் 250 படகுகள் பயன்பாட்டில் உள்ளன.

பொது முடக்கம் நீடிப்பதால் பிடித்துவரப்படும் மீன்கள் ஏற்றுமதி செய்ய முடியாமல் முடங்குவதாகவும், நல்ல விலை கிடைக்கவில்லை எனவும் மீனவர்கள் கூறிவந்தனர்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை விசைப்படகுகள் எதுவும் கடலுக்குச் செல்லவில்லை. 

இதுகுறித்து விசைப்படகு மீனவர்கள் கூறுகையில், கேரள மாநிலத்துக்கு மீன்கள் ஏற்றுமதி செய்யப்படும். ஏற்றுமதித் தரம் வாய்ந்த மீன்கள் பிடித்துவரப்படும்போது அதிக விலைக்கு விற்க முடிந்தது. கரோனா பொது முடக்கத்தால், கேரள மாநிலத்தில் பெரிய மார்க்கெட்டுகள் பல மூடப்பட்டிருப்பதாகக்கூறி, முகவர்கள் பலர் வருவதில்லை. காரைக்காலில் இருந்து கடலுக்குச் சென்று மீன்பிடித்து வந்தாலும், உரிய முறையில் விற்பனை செய்து லாபமீட்ட முடியவில்லை. 

பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. இந்த விவகாரம் சீரடையும் வரை படகுகளை இயக்குவதில்லை என முடிவு செய்திருக்கிறோம் என்றனர்.

 ஏற்கெனவே கடலுக்கு சென்ற விசைப்படகுகள் கரை திரும்பும்போது மீன்கள் விற்பனை இருக்கும். காரைக்கால் மாவட்டத்தின் கடலோர கிராமத்திலிருந்து சிறிய படகுகள் கடலுக்குச் சென்றுவர எந்த தடையும் இல்லை என மேலும் அவர்கள் தெரிவித்தனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →