எரிபொருள் தட்டுப்பாடு: இந்தியாவிடம் உதவி கேட்கும் அண்டைநாடுகள்!
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்தியாவிடம் அண்டை நாடுகள் உதவி கேட்டுள்ளது பற்றி...
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்தியாவிடம் அண்டை நாடுகளான இலங்கை, வங்கதேசம், மாலத்தீவு ஆகிய நாடுகள் உதவி கேட்டுள்ளனர்.
அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. இதனால், உலகம் முழுக்க பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உலகின் எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு ஹோர்முஸ் நீரிணை பாதையை நம்பியுள்ள நிலையில் தற்போது அது மூடப்பட்டது உலகளாவிய எரிசக்தி சந்தையில் முக்கிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது.
இந்தியாவிலும் நிலைமை மோசமாகும் சூழ்நிலை உருவானதால் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விநியோகம் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், அண்டை நாடுகளான இலங்கை, வங்கதேசம், மாலத்தீவு ஆகிய நாடுகள் இந்தியாவிடம் எரிபொருள் விநியோகம் தொடர்பாக உதவுமாறு கோரிக்கை வைத்துள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
”அண்டை நாடுகளிடமிருந்து எரிவாயு விநியோகம் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. வங்கதேசம் குறிப்பாக டீசல் விநியோகத்தை நாடியுள்ள நிலையில் இந்தியாவின் தேவை மற்றும் உற்பத்தி அளவைக் கணக்கிட்டு அதற்கேற்ற முடிவை அமைச்சகம் எடுக்கும்” என வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெயிஸ்வால் தெரிவித்தார்.
இந்தியாவின் உள்நாட்டு எரிசக்தி தேவை பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்த பின்னர், வங்கதேசம் மற்றும் பிற அண்டை நாடுகளுக்கு எரிபொருள் ஏற்றுமதி செய்வது குறித்த முடிவுகள் கவனமாக எடுக்கப்படும் என்று வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
போரின் காரணமாக ஆயில் பேரல் விலை ஒரு பேரலுக்கு 110 டாலராக விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Bangladesh, Sri Lanka, Maldives seek fuel supplies from India amid growing energy crisis
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.