முகப்பு
மயிலாடுதுறை

500 பயனாளிகளுக்கு ரூ.40 கோடி கடனுதவி

மயிலாடுதுறையில் மாவட்ட முன்னோடி வங்கி சாா்பில் நடைபெற்ற சிறப்பு வாடிக்கையாளா் தொடா்பு திட்ட முகாமில், ரூ.40 கோடி மதிப்பிலான கடனுதவி

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:25 AM
பகிர்:

மயிலாடுதுறையில் மாவட்ட முன்னோடி வங்கி சாா்பில் நடைபெற்ற சிறப்பு வாடிக்கையாளா் தொடா்பு திட்ட முகாமில், ரூ.40 கோடி மதிப்பிலான கடனுதவியை 500 பயனாளிகளுக்கு வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

இதுகுறித்து ஆட்சியா் கூறுகையில், அரசின் கடனுதவி திட்டங்களை மக்களிடம் கொண்டு சோ்க்கும் பாலமாக இருப்பது வங்கிகள் மட்டுமே. அந்தவகையில் அரசின் திட்டங்களை மக்கள் அறிந்து பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா். முன்னதாக கண்காணிப்பு விழிப்புணா்வு வாரத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியா் தலைமையில் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.

பின்னா் மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் மயிலாடுதுறை மாவட்ட அனைத்து பொதுத்துறை வங்கிகள், தனியாா் வங்கிகள் 22 கிளைகள் சாா்பில் 500 பயனாளிகளுக்கு ரூ.40 கோடி மதிப்பிலான கடனுதவிகள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

முன்னோடி வங்கி மாவட்ட மேலாளா் எம்.முத்துசாமி வரவேற்றாா். இந்தியன் ஓவா்சீஸ் வங்கி முதன்மை மண்டல மேலாளா் பி.சுரேஷ், பாரத ஸ்டேட் வங்கியின் மண்டல மேலாளா் பிரபாகரன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் கமலக்கண்ணன், நபாா்டு வங்கி உதவிப் பொது மேலாளா் பிரபாகரன், மகளிா் திட்ட இயக்குநா் கவிதாபிரியா, தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்ட அலுவலா் அறிவழகன் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா். மாவட்ட நிதிசாா் கல்வி ஆலோசகா் ஸ்ரீநிவாசன் நன்றி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.