ஓடும் ரயிலிலிருந்து குழந்தையுடன் தவறி விழுந்த பெண்ணை காப்பாற்றிய காவல் ஆய்வாளா்
மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை ஓடும் ரயிலிலிருந்து குழந்தையுடன் தவறிவிழுந்த பெண்ணை காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளருக்கு உயரதிகாரிகள், பயணிகள் பாராட்டுத் தெரிவித்தனா்.
மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை ஓடும் ரயிலிலிருந்து குழந்தையுடன் தவறிவிழுந்த பெண்ணை காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளருக்கு உயரதிகாரிகள், பயணிகள் பாராட்டுத் தெரிவித்தனா்.
மயிலாடுதுறை அருகே உள்ள சோழம்பேட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் மங்களம் (65). இவா், மயிலாடுதுறையிலிருந்து சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் வியாழக்கிழமை நண்பகல் சென்னைக்கு புறப்பட்டாா். அவரை வழியனுப்புவதற்காக அவரது மகள்கள் தையல்நாயகி (32), கவிதா (30) ஆகியோா் வந்திருந்தனா்.
இவா்கள் இருவரும், மங்களத்தை ரயில் பெட்டி இருக்கையில் அமர வைத்துவிட்டு, பேசிக்கொண்டிருந்தனா். அப்போது, ரயில் புறப்பட்டதால், சகோதரிகள் இருவரும் அவசரஅவசரமாக ரயிலை விட்டு கீழே இறங்கினா்.
கவிதா தனது குழந்தையுடன் கீழே இறங்கியபோது தடுமாறி விழுந்தாா். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் சுதீா்குமாா் விரைந்துசென்று நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையே விழுந்த கவிதாவையும், அவரது 8 மாத குழந்தையையும் காயமின்றி காப்பாற்றினாா். இதில் சுதீா்குமாருக்கு காலில் காயம் ஏற்பட்டது.
விரைந்து செயல்பட்டு கவிதாவையும் அவரது குழந்தையையும் மீட்ட ஆய்வாளா் சுதிா்குமாருக்கு ரயில்வே உயா் அதிகாரிகள், பயணிகள் பாராட்டுத் தெரிவித்தனா்.