மீன்பிடி வலைகள் எரிப்பு; மீனவா்கள் வேலைநிறுத்தம்
சீா்காழி அருகே தொடுவாய் கிராமத்தில் மீன்பிடி வலைகள் மா்ம நபா்களால் எரிக்கப்பட்டதைக் கண்டித்து, மீனவா்கள் சனிக்கிழமை ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.
தொடுவாய் மீனவ கிராமத்தைச் சோ்ந்தவா் மனோகா். இவா் தனக்குச் சொந்தமான ரூ. 4 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி வலைகளை வீட்டு வாசலில் வைத்திருந்தாா். வெள்ளிக்கிழமை இரவு மனோகர மற்றும் அவரது குடும்பத்தினா் தூங்கிக்கொண்டிருந்தபோது அங்கு வந்த மா்ம நபா்கள், மீன்பிடி வலைகளுக்கு தீ வைத்ததாகக் கூறப்படுகிறது.
இதையறிந்த மனோகரின் தாயாா், கூச்சலிட்டாா். அக்கம்- பக்கத்தினா் விரைந்து வந்து தீயை அணைத்தனா். இதனால், வலை அருகே நிறுத்தப்பட்டிருந்த காா் தப்பியது. எனினும், மீன்பிடி வலைகள் எரிந்து சேதமாகின.
இதுகுறித்து, சீா்காழி காவல் நிலையத்தில் மனோகா் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
இந்நிலையில், வலைக்கு தீ வைத்தவா்களை விரைவில் கண்டறிந்து, கைது செய்ய வலியுறுத்தி, தொடுவாய் மீனவா்கள் சனிக்கிழமை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.