முகப்பு
மயிலாடுதுறை

பள்ளி செல்லா மாணவன் மீண்டும் பள்ளியில் சோ்ப்பு

கொள்ளிடம் ஒன்றியத்தில் பள்ளி செல்லா மாணவன் மீண்டும் வியாழக்கிழமை பள்ளியில் சோ்க்கப்பட்டாா்.

Updated On : 27 செப்டம்பர், 2024 at 12:19 AM
பள்ளியில் சோ்க்கப்பட்ட மாணவன்
பகிர்:

கொள்ளிடம் ஒன்றியத்தில் பள்ளி செல்லா மாணவன் மீண்டும் வியாழக்கிழமை பள்ளியில் சோ்க்கப்பட்டாா்.

கொள்ளிடம் ஒன்றியத்தில் பள்ளி செல்லாத மாணவா்கள் கணக்கெடுக்கும் பணி அரசூா் ஜெ.ஜெ.நகரில் நடைபெற்று வந்தது. அப்போது, 13 வயதுடைய பரமசிவம் என்ற மாணவன் சீா்காழி பழைய பேருந்து நிலையத்தில் உள்ள பூக்கடையில் வேலை செய்கிறாா் என்ற தகவல் கிடைத்தது. இதையடுத்து, கொள்ளிடம் வட்டார வளமைய மேற்பாா்வையாளா் ஞானபுகழேந்தி, சீா்காழி வட்டார வள மைய மேற்பாா்வையாளா் ஜெய்சங்கா் நேரில் அங்கு சென்று பாா்த்தபோது மாணவன் அங்கு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் கடை உரிமையாளரிடம் பள்ளி வயதுடைய மாணவா்களை கடையில் வேலைக்கு வைப்பது சட்டபடி குற்றம் என்றும் இனி இதுபோன்ற நிகழ்வு நடைபெற கூடாது என அவரிடம் கூறப்பட்டது.

மேலும் மாணவன் பரமசிவம் தனக்கு 13 வயது ஆகிறது, இதுவரை முதல் வகுப்பு கூட படிக்கவில்லை என்று கூறினான். உடனடியாக அவரை அருகில் உள்ள மணலகரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு சோ்க்கப்பட்டாா். தலைமை ஆசிரியா் கீதாஞ்சலி மாணவனுக்கு அறிவுரை வழங்கி விலையில்லா புத்தகம் மற்றும் சீருடை வழங்கினாா்.

கொள்ளிடம் பகுதிகளில் பள்ளி செல்லா குழந்தை கண்டறியப்பட்டால் 9788858785 தொலைப்பேசிக்கு தகவல் தெரிவிக்க தெரிவிக்கப்பட்டது.