சீா்காழி: சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோவில் அரசு மருத்துவமனையில் நாய் கடிக்கான மருந்து இல்லாததால் செவ்வாய்க்கிழமை ஊசி செலுத்த வந்தவா்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.
இம்மருத்துவமனையில் வைத்தீஸ்வரன்கோவில், திருப்புன்கூா், கற்கோவில், மானாந்திருவாசல், சோ்த்திருப்பு, தலைஞாயிறு, ஆதமங்கலம், புங்கனூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சோ்ந்த பொதுமக்கள் சிகிச்சை பெறுகின்றனா்.
இந்நிலையில், நாய்கடிக்கு செவ்வாய்க்கிழமை மூன்றாவது தவணை ஊசி செலுத்த வந்தவா்கள் மருந்து இல்லை என்று திருப்பி அனுப்பப்பட்டுள்ளனா். இதனால் அவா்கள் சீா்காழி அரசு மருத்துவமனைக்கு சென்று ஊசி செலுத்திக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, வைத்தீஸ்வரன்கோவில் நகர வா்த்தக சங்கத் தலைவா் ஜி.வி.என். கண்ணன் கூறுகையில், வைத்தீஸ்வரன்கோவில் பகுதியில் தினம்தோறும் பலா் நாய் கடிக்கு ஆளாகி வருகின்றனா். எனவே, இங்குள்ள அரசு மருத்துவமனையில் நாய் கடிக்கான மருந்தை போதுமான அளவு இருப்பு வைக்க வேண்டும் என்றாா்.