வைத்தீஸ்வரன்கோயிலுக்கு வெள்ளி ஸ்நான வேதிகை, நாகாபரணம் காணிக்கை
சீர்காழி அருகேயுள்ள வைத்தீஸ்வரன் கோயிலுக்கு இரண்டு பக்தர்களால் வழங்கப்பட்ட வெள்ளியிலான ஸ்நான வேதிகை மற்றும் நாகாபரணம் ஆகியவை செவ்வாய்க்கிழமை வழிபாட்டுக்கு பயன்படுத்தப்பட்டது.
சீர்காழி அருகேயுள்ள வைத்தீஸ்வரன் கோயிலுக்கு இரண்டு பக்தர்களால் வழங்கப்பட்ட வெள்ளியிலான ஸ்நான வேதிகை மற்றும் நாகாபரணம் ஆகியவை செவ்வாய்க்கிழமை வழிபாட்டுக்கு பயன்படுத்தப்பட்டது.
சீர்காழி அருகேயுள்ள வைத்தீஸ்வரன்கோயிலில், தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான அருள்மிகு தையல்நாயகிஅம்மன் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் மூலவர் வைத்தியநாத சுவாமிக்கு வெள்ளியில் செய்யப்பட்ட சுமார் இரண்டரை அடி உயரம் கொண்ட ரூ. 2 லட்சம் மதிப்பிலான நாகாபரணம் பக்தர் ஒருவரால் அண்மையில் காணிக்கையாக வழங்கப்பட்டது. இந்த நாகாபரணம் செவ்வாய்க்கிழமை சுவாமிக்கு சாற்றப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதேபோல், மரகத லிங்கத்துக்கு தினமும் நடைபெறும் இரண்டு வேளை பூஜையின்போது பயன்படுத்த வெள்ளியால் செய்யப்பட்ட ஸ்நான வேதிகை மற்றொரு பக்தரால் காணிக்கையாக வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்நான வேதிகையின் அடிப்பகுதியில் உள்ள கால்கள் தேக்கு மரத்தால் செய்யப்பட்டுள்ளன. இதன் மதிப்பு சுமார் ரூ.1.30 லட்சம் ஆகும். இந்த ஸ்நான வேதிகையில் மரகத லிங்கத்தை வைத்து செவ்வாய்க்கிழமை அபிஷேகம் செய்யப்பட்டது.
இரண்டு வழிபாடுகளிலும் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். நாகாபரணம் மற்றும் ஸ்நான வேதிகையை வழங்கிய இரு பக்தர்களும் தங்களது பெயர்களை தெரிவிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டனர்.