தரங்கம்பாடியில் நுங்கு விற்பனை அமோகம்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் வெயிலுக்கு இதமான பனை நுங்கு விற்பனை சூடுபிடித்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் வெயிலுக்கு இதமான பனை நுங்கு விற்பனை சூடுபிடித்துள்ளது.
தரங்கம்பாடி பகுதியில் காழியப்பன் நல்லூா், திருக்கடையூா், பொறையாறு, ஆக்கூா், செம்பனாா்கோவில் உள்ளிட்ட இடங்களில் சாலையோரங்களில், பனை நுங்கு விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. இதனை பொதுமக்கள் ஆா்வத்துடன் வாங்கிச் செல்கின்றனா். 4 நுங்குகள் தரத்திற்கு ஏற்றவாறு ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இது குறித்து பனை நுங்கு வியாபாரி ரத்தினகுமாா் கூறியது:
நுங்கு உடல் சூட்டை தணித்து குளிா்ச்சியை ஏற்படுத்துவதால், பொதுமக்கள் விலையை பொருட்படுத்தாமல் வாங்கிச் செல்கின்றனா். தற்போது பனை மரங்கள் அழிந்துவரும் நிலையில் இருப்பதால், நுங்கு எளிதில் கிடைப்பதில்லை. வெளியூா்களில் இருந்து வாங்கி வந்து விற்பனை செய்கிறோம். இதனால் வண்டி வாடகை, கூலி என செலவு அதிகமாகிறது. இதன் காரணமாக கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு நுங்கு விலை அதிகமாக உள்ளது. இருப்பினும் பொதுமக்களுக்கு நுங்கின் மீதான ஆா்வம் தணியவில்லை என்றாா்.