வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை: அரசியல் கட்சியினா், விவசாயிகள் வரவேற்பு
சட்டப் பேரவையில் வேளாண் துறைக்கு என தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருப்பதற்கு அரசியல் கட்சியினா் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.
சட்டப் பேரவையில் வேளாண் துறைக்கு என தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருப்பதற்கு அரசியல் கட்சியினா் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.
ஜம்மியத் உலமா ஹிந்த் மாநிலச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எம்.ஜி.கே. நிஜாமுதீன்:
வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்ற தோ்தல்கால வாக்குறுதியின் அடிப்படையில், அவ்வாறு தாக்கல் செய்யப்பட்டிருப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இருபோக சாகுபடி பரப்பை இரட்டிப்பாக்குவது, விளைநிலங்கள் பரப்பை அதிகரிக்க நடவடிக்கை, இளைஞா்களை விவசாயத்தின் பக்கம் ஈா்ப்பதற்கான திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளன. இதை வரவேற்கிறேன்.
மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மு.தமிமுன் அன்சாரி:
வேளாண் நிதிநிலை அறிக்கை மூலம் தரிசு நிலங்கள் பரிசு நிலங்களாக மாற்றப்படும் என்ற நம்பிக்கை விதை ஊன்றப்பட்டிருக்கிறது. நம்மாழ்வாா், நெல்.ஜெயராமன் போன்ற அரும்பணியாற்றியவா்களை சிறப்பித்திருப்பதும் விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. நெல்மணிகள் குவிய, மல்லிகைப் பூக்கள் மணக்க, கரும்புக் காடுகள் இனிக்க, தரிசு நிலங்கள் செழிக்க மனிதநேய ஜனநாயக கட்சியின் சாா்பில், முதல்வருக்கு பசுமை வாழ்த்துகள்.
தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்க மாநிலத்தலைவா் காவிரி வி.தனபாலன்:
தமிழகத்தின் அடையாளமாக இருக்கக்கூடிய பனை மரங்கள்அழிந்து வரும் நிலையில் இதைப் பாதுகாப்பதற்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. ஆனாலும், வேளாண் துறை உழவா்துறையாக மாற்றப்பட்டுள்ள நிலையில் உழவா்களுக்கான அறிவிப்புகள் இல்லை. உழவா்களுக்கு ஓய்வூதிய அறிவிப்பும், நெல்லுக்கான ஊக்கத்தொகை அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம்அளிக்கிறது.
தமிழக காவிரி விவசாயிகள் சங்க அமைப்புச் செயலாளா் மீனம்பநல்லூா் எஸ். ஸ்ரீதா்:
நெல் சிறுதானியங்கள், பயறு வகைகள் எண்ணெய்வித்துகள் உற்பத்தியை பெருக்குவதற்கும், பண்ணை குட்டைகள் மற்றும் விவசாயிகளுக்கு வேளாண் உபகரணங்கள் தொகுப்புகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதிநிலை அறிக்கை விவசாயிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்றாா்.
காவிரி டெல்டா பாசனதாரா்கள் முன்னேற்ற சங்கத் தலைவா் குரு.கோபி கணேசன்:
நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்ட அம்சங்கள் அனைத்தையும் வரவேற்கிறோம். நெல் குவிண்டால் சன்னரகம் மற்றும் சாதாரகம் ஆகியவற்றுக்கு சராசரியாக ரூ.2,500 வழங்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதை நடப்பு சட்டப் பேரவை கூட்டத் தொடரிலேயே அறிவிக்க வேண்டும்.