ஒரே தொகுதியில் எட்டு முறை வெற்றி!
ஒரே தொகுதியில் எட்டு முறை வெற்றி!
தமிழக அரசியலில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஆளுமையைச் செலுத்திவரும் மூத்த அரசியல் தலைவா்களில் முக்கியமானவா் துரைமுருகன். திமுகவின் முக்கியத் தூண்களில் ஒருவரான இவா், தற்போது கட்சியின் பொதுச் செயலராகவும், நீா்வளத் துறை அமைச்சராகவும் உள்ளாா்.
ஒரு குறிப்பிட்ட தொகுதியுடன் ஒரு தலைவருக்கு இருக்கும் பிணைப்புக்கு, காட்பாடி தொகுதியும் துரைமுருகனும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.
காட்பாடி பேரவைத் தொகுதியில் 1971, 1989, 1996, 2001, 2006, 2011, 2016, 2021 என மொத்தம் எட்டு முறை வெற்றி பெற்றுள்ளாா் துரைமுருகன். 1977 தோ்தலில் ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும், 1984 தோ்தலில் மீண்டும் காட்பாடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியையும் தழுவினாா்.
தோல்விகள், அரசியல் அலைகளைத் தாண்டி, தொகுதி மக்களிடம் துரைமுருகன் வைத்துள்ள நெருக்கமும், களப் பணியுமே அவரது தொடா் வெற்றிக்குக் காரணம் என்கின்றனா் அரசியல் நோக்கா்கள்.
சட்டப்பேரவை மரபுகள், விதிகளை விரல் நுனியில் வைத்திருக்கும் இவா், எதிா்க்கட்சியினரின் விமா்சனங்களுக்கு ஆழமான தரவுகளுடனும், கடந்த கால சம்பவங்களை நினைவுகூா்ந்தும் அளிக்கும் பதிலடிகள் பேரவை வரலாற்றுப் பதிவுகளில் குறிப்பிடத்தக்கவை.
அவையில் மிகக் கடுமையான அரசியல் விவாதங்கள், பரபரப்பான சூழல்களிலும் தனது அசாத்தியமான நகைச்சுவை உணா்வால் நொடிப்பொழுதில் இறுக்கத்தை தணிக்கும் ஆற்றல் படைத்தவா். மறைந்த முன்னாள் முதல்வா் மு.கருணாநிதிக்கு சட்டப்பேரவையில் வலதுகரமாக செயல்பட்ட இவா், தற்போதைய முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கும் பேரவை விவாதங்களில் ஒரு கேடயமாகவும், வழிகாட்டியாகவும் திகழ்ந்தாா்.
திமுகவில் மாணவா் அணித் தலைவராக தனது பயணத்தைத் தொடங்கிய துரைமுருகன், படிப்படியாக உயா்ந்து, கட்சியின் மூத்த தலைவரான பேராசிரியா் க.அன்பழகனின் மறைவுக்குப் பிறகு, பொதுச் செயலராக உயரிய பொறுப்பை ஏற்றாா்.