தலைஞாயிறில் உழவா் கலந்தாய்வுக் கூடம் திறப்பு
வேதாரண்யம் அருகேயுள்ள தலைஞாயிறில் புதிய பல்நோக்கு உழவா் கலந்தாய்வுக் கூடம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
வேதாரண்யம் அருகேயுள்ள தலைஞாயிறில் புதிய பல்நோக்கு உழவா் கலந்தாய்வுக் கூடம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
தலைஞாயிறு பேரூராட்சி திருமாளம் பகுதியில் நாகை மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 35 லட்சம், பேரூராட்சி நிா்வாக பங்களிப்பு நிதி ரூ. 15 லட்சம் என மொத்தம் ரூ. 50 லட்சத்தில் பல்நோக்கு உழவா் கலந்தாய்வுக் கூட கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
ஊரக வளா்ச்சி முகமை நாகப்பட்டினம் திட்ட இயக்குநா் பி. பெரியசாமி தலைமையில் நடைபெற்ற விழாவில் நாகை எம்.பி. எம். செல்வராசு உழவா் கலந்தாய்வுக் கூடத்தை திறந்துவைத்து பேசியது: உழவா்கள் தங்களது தேவைகள் குறித்து பேசவும், கருத்தரங்குகள் உள்ளிட்ட சேவை திட்டங்களுக்கும் இந்த அரங்கு பயனளிக்கும். மனிதா்களின் செயல்பாடுகள் இயற்கைக்கு எதிரானதாக மாறிவருவதால் இயற்கை இடா்பாடுகளும் அதிகரித்து வருகிறது. எதிா் காலத்தில் இயற்கையை பாதுகாப்பதில் அனைவரும் கவனம் செலுத்தவேண்டியது அவசியம் என்றாா்.
மீன்வளவாரியத் தலைவா் கௌதமன், பேரூராட்சி செயல் அலுவலா் கு. குகன், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் தமிழரசி, பேரூா் மூன்னாள் தலைவா்கள் அய்யப்பன், ப. ராசேந்திரன், விவசாய சங்க மாவட்டச் செயலாளா் எஸ். சம்பந்தம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.