மாவட்டத்தின் 9 கடலோரப் பகுதிகளில் செயற்கை பவளப்பாறைகள் இறக்கப்படும்
மீன் வளப் பெருக்கத்துக்காக நாகை மாவட்டத்தின் 9 மீனவக் கிராமத்தையொட்டிய கடல் பகுதிகளில் செயற்கை பவளப்பாறைகள் இறக்கப்படும் என்று நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்தாா்.
மீன் வளப் பெருக்கத்துக்காக நாகை மாவட்டத்தின் 9 மீனவக் கிராமத்தையொட்டிய கடல் பகுதிகளில் செயற்கை பவளப்பாறைகள் இறக்கப்படும் என்று நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்தாா்.
நாகை துறைமுகத்தில் இருந்து சுமாா் 15 கி.மீ தொலைவில் கடல் பகுதியில் செயற்கை பவளப்பாறைகளை இறக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இப்பணியை ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் கொடி அசைத்துத் தொடங்கி வைத்தாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியது: மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை சாா்பில் நாகை மாவட்டத்தில் முதல் கட்டமாக நாகை, கல்லாறு, வானவன்மகாதேவி, வெள்ளப்பள்ளம், வேட்டைக்காரனிருப்பு, விழுந்தமாவடி, திருப்பூண்டி உள்பட 9 மீனவக் கிராமங்களில் ரூ. 3 கோடி மதிப்பில் 1,530 பவளப்பாறைகளை கடலில் இறக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. முக்கோணம், வட்டம் ஆகிய வடிவங்களிலும், குழு வடிவத்திலும் தயாரிக்கப்பட்ட பவளப்பாறைகள் இப்பகுதிகளில் இறக்கப்படவுள்ளன. இதன்மூலம், மீன்வளம் குறிப்பிடத்தக்க அளவில் மேம்படும் என்றாா்.
கீழ்வேளூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் வி.பி. நாகை மாலி, துறைமுக திட்ட கோட்ட செயற்பொறியாளா் எஸ். கிருஷ்ணமூா்த்தி, உபகோட்ட உதவி செயற்பொறியாளா் எம்.ஜி. ராஜேந்திரன், மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் ஜெயராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.