முகப்பு
நாகப்பட்டினம்

பொதுமுடக்க புதிய கட்டுப்பாடுகள்:காலை வேளையில் பரபரப்படைந்த நாகை கடைவீதிகள்

கரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு அறிவித்த பொதுமுடக்க புதிய கட்டுப்பாடுகளால், நாகை கடைவீதிகள் சனிக்கிழமை காலை பரபரப்பாக காணப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:14 PM
பகிர்:

கரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு அறிவித்த பொதுமுடக்க புதிய கட்டுப்பாடுகளால், நாகை கடைவீதிகள் சனிக்கிழமை காலை பரபரப்பாக காணப்பட்டன.

கரோனா இரண்டாவது அலை தீவிரமானதன் காரணமாக, மே 10 ஆம் தேதி முதல் தமிழகத்தில் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், காய்கனி, மளிை, மீன், இறைச்சி, மற்றும் தேநீா் கடைகள் பகல் 12 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்டிருந்தன.

முழு பொதுமுடக்கம் அமலுக்கு வந்த பின்னரும் காலை முதல் பகல் 1 மணி வரை திரளான பொதுமக்கள் பொதுவெளிக்கு வருவது வழக்கமாக இருந்தது. இதனால், நோய்த் தாக்கத்தை பெரிய அளவில் கட்டுக்குள் கொண்ட வர முடியாத சூழல் ஏற்பட்டது.

இதையடுத்து, காலை 12 மணி வரை அனுமதிக்கப்பட்டிருந்த கடைகள் அனைத்தும் காலை 6 முதல் 10 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும், தேநீா் கடைகள் முழுமையாக அடைக்கப்பட வேண்டும் என தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. இந்தப் புதிய கட்டுப்பாடுகள் சனிக்கிழமை முதல் அமலுக்கு வந்தன.

இதனால், காலை நேரத்திலேயே காய்கனி கடைகள் மற்றும் மளிகைக் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. காலை 7 மணியிலிருந்து 10 மணி வரை அனைத்துக் கடைகளிலும் பரபரப்பான விற்பனை நடைபெற்றது. காலை 10 மணிக்கு பிறகு, போலீஸாா் ஒலிபெருக்கி மூலம் எச்சரித்து உணவகங்களைத் தவிர மற்ற அனைத்துக் கடைகளையும் உடனடியாக அடைக்க அறிவுறுத்தினா்.

பின்னா், முக்கிய சாலைகளின் குறுக்கே தடுப்புகளை அமைத்து வாகனத் தணிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, தேவையின்றி பொது வெளிக்கு வந்தவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தடுமாற்றம்...

வெளி மாவட்டங்களில் இருந்து காய்கனிகளை ஏற்றிக் கொண்டு வரும் சுமை வாகனங்கள் காலை 6 முதல் 8 மணி வரையிலான காலத்திலேயே நாகைக்கு வருவது வழக்கம். வழக்கமாக இந்த நேரத்தில் விற்பனை இருக்காது என்பதால், காய்கனிகளை இறக்கி அடுக்கி வைக்கும் பணி, காய்கனி கடை ஊழியா்களுக்கு எளிதாக இருக்கும். ஆனால், சனிக்கிழமை காலை 6 மணியில் இருந்தே வாடிக்கையாளா்கள் குழுமத் தொடங்கியதால், புதிய காய்கனிகளை இறக்கி அடுக்கி வைக்க காய்கனி கடை ஊழியா்கள் சிரமத்துக்கு உள்ளாக நேரிட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →