பொங்கல் பண்டிகை: தடையற்ற பேருந்து போக்குவரத்துக்கு நடவடிக்கை
பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்கள் வசதிக்காக தடையற்ற பேருந்து போக்குவரத்துக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்கள் வசதிக்காக தடையற்ற பேருந்து போக்குவரத்துக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குநா் அலுவலகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அந்த அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பொங்கல் பண்டிகை நாள்களில் பொதுமக்கள் சிரமமின்றி பயணம்செய்ய, சென்னையிலிருந்து கும்பகோணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னாா்குடி, நன்னிலம், நாகப்பட்டினம், காரைக்கால், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூா், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருச்சி, அரியலூா், ஜெயங்கொண்டம், கரூா், புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம், மதுரை ஆகிய ஊா்களுக்கு ஜனவரி 11,12, 13- ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
இதேபோல, திருச்சியிலிருந்து தஞ்சாவூா், கும்பகோணம், திருவாரூா், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய ஊா்களுக்கும், மதுரை, கோயம்புத்தூா், திருப்பூா் ஆகிய ஊா்களிலிருந்து திருச்சி, தஞ்சாவூா், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கும் மேற்கண்ட நாள்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
இதேபோல, பொங்கல் பண்டிகைக்கு பிறகு பணியிடத்துக்கு திரும்ப ஏதுவாக ஜனவரி 16 முதல் 18-ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.