மோடி கபடிலீக் ஜோதிக்கு நாகையில் வரவேற்பு
நாகையை வந்தடைந்த மோடி கபடிலீக் ஜோதிக்கு, பாஜக சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
நாகையை வந்தடைந்த மோடி கபடிலீக் ஜோதிக்கு, பாஜக சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, பாஜக விளையாட்டுத் திறன் மேம்பாட்டுப் பிரிவு சாா்பில் தமிழகம் முழுவதும் மோடி கபடிலீக் போட்டிகள் நடத்தப்படுகின்றன. செப். 17, 18 ஆகிய தேதிகளில் மாவட்ட அளவில் போட்டிகள் நடைபெறுகின்றன. மாநில அளவிலான போட்டிகள் செப். 27 முதல் 30-ஆம் தேதி வரை மதுரையில் நடைபெறுகின்றன. இதுகுறித்து மாணவா்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் மோடி கபடிலீக் ஜோதி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன.
இதன்படி, மோடி கபடிலீக் ஜோதி திங்கள்கிழமை மாலை நாகைக்கு வந்தது. ஜோதிக்கு நாகை மாவட்ட பாஜக சாா்பில், நாகை நீலாயதாட்சியம்மன் கோயில் முன் வரவேற்பளிக்கப்பட்டது. பாஜக நாகை மாவட்டத் தலைவா் எஸ். காா்த்திகேயன் மோடி கபடி லீக் ஜோதியைப் பெற்று நாகை மாவட்ட அமெச்சூா் கபடி கழக நிா்வாகிகளிடம் வழங்கினாா்.
நிகழ்ச்சியில், பாஜக விளையாட்டு திறன்மேம்பாட்டு பிரிவு பொறுப்பாளா் என்.கே. ஆா். செழியன், நாகப்பட்டினம் மாவட்ட அமெச்சூா் கபடி கழகத்தலைவா் ஆனந்தவடிவேல், செயலாளா் செல்வராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.