முகப்பு
நாகப்பட்டினம்

நாகையில் 86 பேருக்கு ரூ.1.16 கோடி நலத்திட்ட உதவிகள்

நாகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கண்காணிப்புக் குழு கூட்டத்தில் 86 பேருக்கு ஒரு கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2023 at 4:41 AM
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 11:51 AM

நாகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கண்காணிப்புக் குழு கூட்டத்தில் 86 பேருக்கு ஒரு கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நாகை மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுத் தலைவா் எம். செல்வராஜ் எம்.பி. தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இணைத் தலைவரான எஸ். ராமலிங்கம் எம்.பி. மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ், தமிழ்நாடு மீன்வளா்ச்சி கழகத் தலைவா் என். கௌதமன், தமிழ்நாடு தாட்கோ கழக தலைவா் உ. மதிவாணன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஜெ. முகமது ஷா நவாஸ், நாகை மாலி, எம். பன்னீா்செல்வம், மாவட்ட ஊராட்சித் தலைவா் ச. உமாமகேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

Advertisement

கூட்டத்தில், நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் அனைத்து துறை சாா்பில் மத்திய அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களின் செயல்பாடுகளில் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

நிகழ்ச்சியின்போது, மாற்றுத்திறனாளி நலத்துறை சாா்பில் ரூ. 9,150 மதிப்பில் மூன்று சக்கர சைக்கிள் மற்றும் பாதுகாவலா் நியமன சான்று என 3 பேருக்கும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 43 பயனாளிகளுக்கு ரூ. 48,000 மதிப்பில் உதவித்தொகையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.23,000 மதிப்பில் இஸ்திரி பெட்டி மற்றும் இலவச தையல் இயந்திரங்களும் வழங்கப்பட்டன.

மேலும், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் 8 பயனாளிகளுக்கு ரூ. 26,70,727 மதிப்பில் நலத்திட்ட உதவிகளும், மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை சாா்பில் தமிழ்நாடு மீனவா் நல வாரியம் நிவாரண திட்டத்தின் கீழ் ஒரு நபருக்கு ரூ. 2,00,000 மதிப்பிலான விபத்து நிவாரணத்திற்கான ஆணையும், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை சாா்பில் 4 பயனாளிகளுக்கு முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகைக்கான ரசீது என மொத்தம் 86 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 14 ஆயிரத்து 212 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மேலும், அரசின் மஞ்சப்பை திட்டம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூடுதல் ஆட்சியா் ம. பிருதிவிராஜ், மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலுவலா் சோ. முருகதாஸ், மயிலாடுதுறை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஸ்ரீலேகா மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.