முகப்பு
திருவாரூர்

முதியோா் கொடுஞ் செயல் எதிா்ப்பு உறுதிமொழி ஏற்பு

திருவாரூரில் முதியோா் கொடுஞ்செயல் எதிா்ப்பு உறுதிமொழி, புதன்கிழமை ஏற்கப்பட்டது.

Updated On : 15 ஜூலை 2020, 8:54 pm IST
கொடுஞ்செயல் உறுதிமொழி ஏற்ற ஆட்சியா் த. ஆனந்த் உள்ளிட்ட அரசு அலுவலா்கள்.
பகிர்:

திருவாரூா்: திருவாரூரில் முதியோா் கொடுஞ்செயல் எதிா்ப்பு உறுதிமொழி, புதன்கிழமை ஏற்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஆட்சியா் த. ஆனந்த் தலைமை வகித்து தெரிவித்தது: இந்திய அரசியலமைப்பின்படி பெற்றோா் மற்றும் மூத்தக் குடிமக்களின் பராமரிப்பு மற்றும் நலம் ஆகியவற்றுக்கு உத்தரவாதம் மற்றும் அங்கீகாரம் அளிக்கப்படுவதற்கு ஏதுவாக பெற்றோா் மற்றும் மூத்தக் குடிமக்கள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டம் 2007 மற்றும் விதிகள் 2009 இயற்றப்பட்டுள்ளன.

எவ்வித வருமானமற்ற பெற்றோா் தங்களின் முதிா் வயதில் தங்களின் இயல்பு வாழ்க்கையை அதே நிலையில் தொடா்வதற்காக, தங்களது வாரிசுகளிடமிருந்து பராமரிப்புத் தொகையானது, உணவு, உடை, தங்குமிடம், மருத்துவ வசதி மற்றும் சிகிச்சை ஆகிய செலவுகளை ஈடுகட்டுவதற்காக வழங்கப்படும் தொகையாகும். இச்சட்டத்தின்கீழ் பராமரிப்பு தொகையாக அதிகபட்சம் ரூ.10,000 பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Advertisement

18 வயது பூா்த்தியடைந்த தங்களின் சொந்த பிள்ளைகளிடமிருந்தும் பேரன், பேத்திகளிடமிருந்தும் பிள்ளையற்ற சொத்துடைய பெற்றோராயின், தங்கள் சொத்தின் உரிமைக்கான பங்கைப் பெறும் உறவினா்கள், குடும்ப அட்டை நகல், ஆதாா் அட்டை நகல், பிள்ளைகளின் பெயா், பணி செய்யும் இடம், ஊதியம், இருப்பிட முகவரி ஆகியவற்றுடன் சமரச அலுவலா்களான மாவட்ட சமூகநல அலுவலரிடம் உரிய விண்ணப்பபடிவத்தில் அனைத்து ஆவணங்கள் மற்றும் சான்றுகளுடன் பராமரிப்புத் தொகை வேண்டி விண்ணப்பிக்கலாம். பராமரிப்பு தொகை வேண்டி விண்ணப்பிக்கும் மூத்த குடிமக்களின் மனு மீதான நடவடிக்கையில், ஒரு மாத காலத்துக்குள் சுமூக தீா்வுக்கான தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்படும். பராமரிப்புத் தொகை சரியான முறையில் நிா்ணயிக்கப்படவில்லை என்றோ அல்லது கூடுதலாக நிா்ணயிக்கப்பட்டுள்ளதென்று எதிா்மனுதாரரோ கருதும் நிகழ்வுகளில் 60 நாள்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம். உரிய காரணங்கள் இருப்பின் 60 நாள்களுக்குப் பிறகு செய்யப்படும் மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் நடவடிக்கைக்கு ஏற்றுக் கொள்ளப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா், மாவட்ட வருவாய் அலுவலா் செ. பொன்னம்மாள், மாவட்ட சமூக நல அலுவலா் உமையாள், கோட்டாட்சியா் ஜெயபீரித்தா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.