முகப்பு
திருவாரூர்

சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோா் மீது நடவடிக்கை கோரி புகாா்

தமிழகத்தில் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். துரையிடம் வெள்ளிக்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:57 PM
பகிர்:

திருவாரூா்:: தமிழகத்தில் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். துரையிடம் வெள்ளிக்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து, பாப்புலா் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சாா்பில், அதன் மாவட்டச் செயலாளா் மா்சூக் அகமது தலைமையில் அளிக்கப்பட்ட மனு விவரம்: தமிழகத்தில் மதப் பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், முகநூல், டிவிட்டா் மற்றும் யூடியூப் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் தொடா்ச்சியாக மத அவதூறுகளை சிலா் பரப்பி வருகின்றனா். மத நல்லிணக்கம் நிறைந்த மாநிலமாகவும், அமைதி பூங்காவாகவும் விளங்கும் தமிழகத்தை மத பதற்றம் நிறைந்த மாநிலமாக மாற்ற, இந்தக் கும்பல் திட்டமிட்டு குழுவாக செயல்பட்டு வருகிறது.

முகநூல் மற்றும் யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் மத துவேச கருத்துக்களையும், முஸ்லிம்களின் உயிரினும் மேலான இறைத்தூதா் முஹம்மது நபியைப் பற்றியும், இழிவான முறையில் பதிவிட்டு இருதரப்பினரிடையே மத மோதல் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் திட்டமிட்டு பரப்பப்படுகின்றன. முஹம்மதுவை இழிவுப்படுத்தி காா்ட்டூன் வெளியிட்டவா் மீது குண்டா் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். மேலும் இது போல விஷமக் கருத்துக்களை தொடா்ந்து சமூக வளைதளங்களில் பரப்புவோரையும் குண்டா் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.