திருவாரூர் அருகே வெட்டாற்றில் தூர்வாரும் பணியின் போது சேதபடுத்தப்பட்ட ஆற்றின் கரையினை சரிசெய்யாமல் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் அபிவிருத்திஸ்வரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதி வழியாக செல்லும் வெட்டாற்றில் தூர்வாரும் பணி நடைபெற்று வந்தது. இந்த பணியின்போது ஒரு பக்க ஆற்றின் கரையானது சேதமடைந்தது. இந்த கரையின் வழியாக கொரடாச்சேரி- குடவாசல் வரை பொது போக்குவரத்து சாலை செல்கிறது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு கரை சீர் செய்யபடாமல் தூர்வாரும் பணிகளை திடீரென அதிகாரிகள் நிறுத்திவிட்டனர்.
இதனை கண்டித்தும் இந்த வெட்டாறு என்பது முக்கிய வடிகால் என்பதால் வரும்
மழைக்காலங்களில் அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்படும் போது உடைப்பு ஏற்பட்டு அபிவிருத்தீஸ்வரம், கமுககுடி, சிட்டிலிங்கம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்படும் என கூறி உடனடியாக ஆற்றின் கரையை பலபடுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திடீரென அப்பகுதி பொதுமக்கள் திருவாரூர் சட்டப்பேரவை உறுப்பினர் பூண்டி.கலைவாணன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் காவல்துறையினர், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் இரண்டு நாட்களில் மீண்டும் பணிகள் தொடங்கி முடிக்கப்படும் என வாக்குறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.