மன்னார்குடி நகர்மன்ற துணைத் தலைவராக திமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகர்மன்ற துணைத் தலைவராக திமுகவை சேர்ந்த ரா.கைலாசம் போட்டியின்றி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகர்மன்ற துணைத் தலைவராக திமுகவை சேர்ந்த ரா.கைலாசம் போட்டியின்றி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
மன்னார்குடி நகரமன்ற தலைவர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட்ட மன்னை த.சோழராஜன்,வெள்ளிக்கிழமை காலையில் நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் வேறுயாரும் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்யாததால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
துணைத் தலைவர் தேர்வுக்கான தேர்தல் மதியம் நடைபெறும் என நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் கே.சென்னுகிருஷ்ணன் அறிவித்தார்.
இதனையடுத்து,மதியம் திமுகவை சேர்ந்த 26 உறுப்பினர்களும்,அமமுகவை சேர்ந்த 2 உறுப்பினர்களும் மறைமுகத் தேர்தலில் கலந்துகொள்வதற்காக நகராட்சி அலுவலகத்திற்கு வந்தனர்.
பின்னர்,நகர்மன்ற துணைத் தலைவர் பதவிக்கு 4 வது வார்டை சேர்ந்த திமுக நகர்மன்ற உறுப்பினர் ரா.கைலாசம் மட்டும் வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்ததையடுத்து. அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்தார்.
இதனையடுத்து,கைலாசத்திற்கு துணைத் தலைவராக தேர்ந்தெடுத்தற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதில்,வியாழக்கிழமை நகர்மன்ற தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பின்னர் மாற்றம் செய்யப்பட்ட திமுக உறுப்பினர் எஸ்.மீனாட்சி மற்றும் அதிமுக உறுப்பினர்கள் 4 பேர் என மொத்தம் 5 பேரும் தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான தேர்தலில் கலந்துகொள்ள வரவில்லை