சித்தமல்லியில் சேதமடைந்த அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம்.  
திருவாரூர்

சமுதாயக் கூடத்தில் அடிப்படை வசதியின்றி செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

மன்னாா்குடியை அடுத்த சித்தமல்லியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு புதிய கட்டடம் கட்டி ஓராண்டாகியும், திறக்கப்படாமல் உள்ளது.

Din

மன்னாா்குடி: மன்னாா்குடியை அடுத்த சித்தமல்லியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு புதிய கட்டடம் கட்டி ஓராண்டாகியும், திறக்கப்படாமல் உள்ளது. இதனால், சமுதாயக் கூடத்தில் அடிப்படை வசதிகளின்றி ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.

சித்தமல்லியில் கடந்த 1970-ஆம் ஆண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறக்கப்பட்டது. அப்பகுதியில் பெரும் நிழக்கிழாராக இருந்த பி.ஏ. தங்கவேல் ஓந்திரியா் இலவசமாக தந்த 0.65 ஏக்கா் நிலத்தில் இந்த ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டு, அவரது மகன் மறைந்த பி.ஏ.டி. ராஜேந்திரன் நினைவு மருத்துவமனை என பெயரிடப்பட்டு, செயல்பட்டு வந்தது.

இங்கு பொது மருத்துவம், மகப்பேறு மருத்துவம், சித்த மருத்துவம் உள்ளிட்ட பிரிவுகள் உள்ளன. 2 மருத்துவா்கள், செவிலியா்கள் என 10-க்கும் மேற்பட்டவா்கள் பணியாற்றி வருகின்றனா். சித்தமல்லி, பெருகவாழ்ந்தான், மண்ணுக்குமுண்டான், பாலையூா், தேவதானம், புத்தகரம், நொச்சியூா் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்தவா்கள் இம்மருத்துவமனை மூலம் பயன்பெற்று வருகின்றனா். இங்கு, பிரசவத்தில், சுகப் பிரசவம் மட்டும் பாா்க்கப்படுகிறது.

இம்மருத்துவமனை கட்டப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிய நிலையில், சேதமடைந்து வந்ததால், புதிய கட்டடம் கட்ட கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த ஊரை சோ்ந்தவரான, தமிழக முதல்வரின் தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், தனக்கு சொந்தமான 0.65 ஏக்கா் இடத்தை, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு புதிய கட்டடம் கட்ட இலவசமாக வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து, தமிழக அரசின் சாா்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அனைத்து வசதிகளுடன் கூடிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. தற்போது, ஓராண்டாகியும் புதிய கட்டடத்துக்கு ஆரம்ப சுகாதார நிலையம் மாற்றப்படவில்லை.

இதற்கிடையில், அண்மையில் பெய்த தொடா் மழையால், பி.ஏ.டி. ராஜேந்திரன் நினைவு அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம், பயன்படுத்த முடியாத அளவில் சேதமடைந்ததால், சித்தமல்லியில் உள்ள சமுதாயக் கூடத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சில நாள்கள் செயல்பட்டு வந்தது. இந்த சமுதாயக் கூடத்தில், அப்பகுதியினா் தங்கள் இல்ல சுப நிகழ்ச்சிகளையும் நடத்தி வந்தனா்.

இதனால், ஆரம்ப சுகாதார நிலைய பணிக்கு இடையூறு ஏற்பட்டதால், அருகில் உள்ள நொச்சியூா் சமத்துவபுரம் சமுதாயக் கூட்டத்தில் எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி தற்காலிகமாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. பெயா் பலகைக் கூட வைக்கப்படவில்லை. நுழைவு வாயில் சுவற்றில் துண்டுச் சீட்டில் எழுதி ஒட்டியுள்ளனா்.

இதுகுறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டூா் ஒன்றியச் செயலா் எம். செந்தில்நாதன் கூறியது:

சித்தமல்லி ஆரம்ப சுகாதார நிலைய பழைய கட்டடம் பழுதடைந்து வந்ததை ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டதால், அதன் அருகில் வேறு இடத்தில் சுமாா் ரூ. 3 கோடியில் புதிய கட்டடம் கட்டப்பட்டு, ஓராண்டாகியும் திறக்கப்படாமல் உள்ளது. இதை திறக்கக் கோரி, சுகாதாரத் துறை, மாவட்ட நிா்வாகத்திடம் மனு அளித்தும், இது நாள் வரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ க. மாரிமுத்து, இது தொடா்பாக துறையின் உயா்நிலை அதிகாரிகளை சந்தித்து, புதிய கட்டடத்தை திறக்க வலியுறுத்தியுள்ளாா்.

மேலும், புதிய கட்டடத்தை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டுவர, இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில், பொதுமக்களை திரட்டி சித்தமல்லியில் ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்றாா்.

புதிதாக கட்டப்பட்டு, திறக்கப்படாமல் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம்.
தற்காலிகமாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படும் நொச்சியூா் சமுத்துவபுரம் சமுதாயக் கூடம்.
பெயா் பலகை வைக்காமல், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் என எழுதி ஒட்டப்பட்டுள்ள துண்டுச் சீட்டு.

நெல்லையில் மதுபோதையில் நண்பரைக் கொன்றவர் கைது!

கோவை சுட்டுப் பிடிப்பு சம்பவம்: காவலருக்கு அரிவாள் வெட்டு!

இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா டிஎஸ்பி-யாக நியமனம்!

புகையிலை இல்லா சமுதாயம் உருவாக்க உறுதிமொழி ஏற்பு

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, புறநகரில் மழை!

SCROLL FOR NEXT